அமெரிக்க அதிபர் ஒபாமா சுட்டுக் கொல்லப்பட்டதாக ட்விட்டர் மூலம் வதந்தி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சுடப்பட்டு விட்டதாக ட்விட்டர் மூலம் பரவிய வதந்தியால் அமெரிக்க அரசும், மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இப்போதெல்லாம் உலகம் முன்பு போல இல்லை. லேசாக யாராவது தும்மினால் கூட அதை ட்விட்டர் மூலம் போட்டுத் தாக்கி விடலாம். அந்த அளவுக்கு படு வேகமாகி விட்டது உலகம். உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அடுத்த விநாடியே அது இணையத்திற்கு வந்து விடுகிறது.
இதனால் பல நல்லது நடந்தாலும், சில நேரங்களில் தவறாகவும் சிலர் பயன்படுத்தி விடுகிறார்கள். அந்த வகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா சுடப்பட்டு விட்டதாக ட்விட்டர் மூலம் வதந்தியைப் பரப்பி உலகை பதற வைத்துள்ளனர் சிலர்.
அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் சேனலின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த சில விஷமிகள், அதில் புகுந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தியை சொருகி விட்டனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. இந்த விஷமத்தைச் செய்தவர்கள் தங்களது பெயரை ஸ்கிரிப்ட் கிட்டிஸ் என்று வைத்துள்ளனர்.
இந்த வதந்தித் தகவலால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உலகம் முழுவதும் இந்த வதந்தி பரவி மேலும் பரபரப்பைக் கூட்டி விட்டது.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்க அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாக்ஸ் நியூஸ் நிறுவனமும் தங்களது ட்விட்டர் கணக்கு எப்படி ஹேக் செய்யப்பட்டது என்பது குறித்து ட்விட்டர் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.












Click it and Unblock the Notifications