பதவி நீக்க நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் வழக்கு தொடருவதா?-பி.டி.தினகரனுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

தினகரன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு உள்நோக்கத்துடன் கூடியதாகும் என்றும் அது கண்டித்துள்ளது.
நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கினார் முன்பு கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.டி.தினகரன். இதையடுத்து அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கும் முடிவு தள்ளி வைக்கப்பட்டது. மேலும் அவரை சிக்கிம் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்தனர்.
தினகரனை பதவி நீக்கம் செய்ய ராஜ்யசபாவிலும் எம்.பிக்கள் மனு கொடுத்துள்ளனர். இதையடுத்து அதுதொடர்பான நடவடிக்கைகளை ராஜ்யசபா மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி அப்தால் ஆலம் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை ராஜ்யசபா தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஹமீத் அன்சாரி நியமித்தார். தினகரன் மீதான நடவடிக்கை குறித்து பரிந்துரைக்க இந்த குழு அமைக்கப்பட்டது.
ஆனால் இந்தக் குழுவின் செயல்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தினகரன், உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, சி.கே. ஆகியோர் இன்று நீதிபதி தினகரனுக்குக் கண்டனம் தெரிவித்தனர். பதவிநீக்க நடவடிக்கைகளை தாமதப்படுத்தும் உள்நோக்கத்துடன் இதுபோன்ற மனுவை நீதிபதி தினகரன் தாக்கல் செய்துள்ளார். இது கண்டனத்துக்குரியது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், ராஜ்யசபா தலைவர் நியமித்த குழுவிலிருந்து மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவை நீக்கியும் பெஞ்ச் உத்தரவிட்டது. இதையடுத்து அவருக்குப் பதில் வேறு ஒருவரை ஹமீத் அன்சாரி நியமிப்பார்.
மேலும் முக்கியமாக, தினகரன் மீதான நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுக்கள் மர்றும் ஊழல், தவறான நடத்தை உள்ளிட்டவை குறித்து விசாரிக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையையும் உச்சநீதிமன்றம் இன்று நீக்கி உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவுகளால் தினகரனுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications