சிறுவன் சுட்டுக் கொலை-சிபிஐ விசாரிக்க திருமா கோரிக்கை, வைகோ நிதியுதவி

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தீவுத்திடல் அருகே ராணுவக் கட்டுப்பாட்டு பகுதியையொட்டி அமைந்துள்ள குடியிருப்பைச் சேர்ந்த தில்ஷான் என்கிற 12 வயது சிறுவனை ராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். ராணுவத்தினரின் இந்த கொடூரச் செயலை விடுதலை சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது.
பல்லாவரம் பகுதியிலும் அவ்வாறே ராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் நடமாடும் பொதுமக்களை அச்சுறுத்துவதோடு விறகு பொறுக்கச் செல்லும் இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தும் கொடுமைகளும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
ராணுவத்தினரின் இத்தகைய அத்துமீறிய செயல்கள் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் காவல் துறையினரால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. இத்தகைய புகார்களை பதிவு செய்யவோ, விசாரிக்கவோ காவல் துறை முனைப்புக் காட்டுவதில்லை.
தற்போது தீவுத் திடல் அருகே நிகழ்ந்துள்ள இந்த பயங்கர வன்முறைக்கும் ராணுவத்தினருக்கும் தொடர்பில்லை என்று ராணுவ தரப்பில் கூறுவதாக தெரிகிறது. இக்கொடூரச் செயலில் ராணுவத்தினர் ஈடுபடவில்லையென்றால் அச்சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது யார் என்னும் கேள்வி எழுகிறது.
எனவே அச்சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் அதே வேளையில் அதன் பின்னணியில் உள்ள சதியினையும் குற்றவாளிகளையும் அடையாளம் காண்பதற்கு இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஆவன செய்ய வேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார்.
வைகோ ரூ.25,000 நிதியுதவி:
இந் நிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் சென்று தில்ஷானின் படத்துக்கு மாலை அணிவித்து, பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். சிறுவனின் தந்தை குமார் எற்கனவே நோய் வாய்ப்பட்டவர் என்பதால் , அந்தக் குடும்பத்துக்கு சார்பில் ரூ.25,000 நிதியுதவியும் அளித்தார்.












Click it and Unblock the Notifications