நில மோசடி சிக்கலில் எதியூரப்பா: முகம் சுளிக்கும் பாஜக

கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீது ஊழல் மேல் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமதப்பட்ட வண்ணம் உள்ளன. இந்நிலையில் மைசூரில் விலை உயர்ந்த நிலங்களை எதியூரப்பா தனது உறவினர்கள் 10 பேருக்கு அடிமாட்டு விலைக்கு கொடுத்துள்ளார்.
மைசூர் விஜயநகர் பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 400 சதுர அடி வீட்டுமனைகள் குறைந்தது ரூ. 20 லட்சத்திற்கு விற்பனையாகும். ஆனால் எதியூரப்பா தனது சகோதரி உள்ளிட்ட 10 உறவினர்களுக்கு அந்த நிலங்களை ரூ. 85 ஆயிரம் முதல் 4.5 லட்சம் வரை விற்றுள்ளார். இது கடந்த 2009-10ம் ஆண்டில் நடந்தது.
இந்த இடங்களை வாங்க அதே பகுதியைச் சேர்ந்தவர்களும், மற்றவர்களும் வருடக்கணக்காக காத்திருக்க எதியூரப்பா உறவினர்களுக்கு அவை விற்கப்பட்டுள்ளது. பெங்களூருக்கு அடுத்தபடியாக மைசூரில் தான் நிலங்களின் விலை அதிகம். கடந்த 6 ஆண்டுகளாக கர்நாடக அரசு பெங்களூரில் யாருக்கும் நிலம் ஒதுக்காததால் மைசூர் நிலங்களுக்கு கிராக்கி அதிகம்.
மைசூரில் அரசு நிலம் ஒதுக்கும் என்று 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எதியூரப்பா தனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் குறைந்த விலையில் நிலத்தை கொடுத்துள்ளார். இந்த ஊழல் எங்கே வெளியே வரப்போகிறது என்பது அவரது எண்ணம் என்று எதியூரப்பாவின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
தனது உறவினர்களுக்கு மைசூரில் உள்ள வீட்டு மனைகளை ஒதுக்கியதை எதியூரப்பா ஒப்புக் கொண்டுள்ளார்.
இது குறித்து எதியூரப்பா கூறியதாவது,
நான் எனது உறவினர்கள், நண்பர்கள் என 10 பேருக்கு நிலம் ஒதுக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நான் கருணை அடிப்படையில் எனது உறவினர்கள் 4 பேருக்கு மட்டும் தான் நிலத்தை ஒதுக்கினேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மீதமுள்ள 6 பேருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் எந்த முறைகேடும் செய்யவில்லை என்றார்.
சிறப்பு திட்டத்தின் கீழ் முதல்வர் யாருக்கு வேண்டுமானாலும் கருணையின் அடிப்படையில் நிலத்தை ஒதுக்கலாம் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எதியூரப்பாவின் சகோதரி தனது கணவரை இழந்துவிட்டார். கோட்டா முறையில் நிலம் ஒதுக்கப்பட்ட மற்ற 3 பேரின் நிலைமையும் பரிதாபமானது தான். பட்டியலில் மீதமுள்ள 6 பேர் முதல்வரின் உறவினர்கள் கிடையாது. அவர் அவர்களுக்கு நிலமும் ஒதுக்கவில்லை என்று முதல்வர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த சர்ச்சையால் மாநில பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
வன நில அபகரிப்பு-'முதலைகளை' காக்க முயன்ற முதல்வர் அலுவலகம்:
இந் சிக்மகளுர் பகுதியில் வன நிலத்தை அபகரித்த தோட்ட அதிபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை முதல்வர் அலுவலகம் தடுத்ததாகவும் ஒரு புகார் எழுந்துள்ளது.
இது குறித்து பொது நில மீட்பு மற்றும் அதன் பாதுகாப்பு பணி குழுவின் தலைவர் வி. பாலசுப்பிரமணியன் கூறுகையில், சிக்மகளூர் மாவட்ட காட்டுப் பகுதியில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள சில முக்கியப் புள்ளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று முதல்வர் அலுவலகத்தில் இருந்து வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு போயுள்ளது.
சும்மாவை முக்கிய புள்ளிகள் மீது வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். இந் நிலையில், இவர்கள் மீது அவரச நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதல்வர் அலுவலகம் வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவும் போட்டுவிட்டால், அவர்கள் என்ன மாதிரியாக நடந்து கொள்வார்கள் என்பது நாமெல்லாம் அறிந்ததே.
இந் நிலம் தவிர பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அபகரிப்பு தொடர்பாகவும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
குமாரசாமியின் அடுத்த டிராமா 'உண்ணாவிரதம்':
இந் நிலையில் தனது குடும்பத்தார் ரூ.1,500 கோடி மதிப்புள்ள சொத்து குவித்துள்ளதாக பாஜக கூறும் புகார்கள் குறித்து முதல்வர் எதியூரப்பா விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்றால் வரும் 9ம் தேதி முதல் விதான செளதா முன் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி கூறியுள்ளார்.
விதான செளதாவில் உண்ணாவிரதத்தை அனுமதிக்க முடியாது என்று முதல்வர் எதியூரப்பா கூறிவிட்டார்.
இதையடுத்து பெங்களூர் சாளுக்கியா சர்க்கிளில் உள்ள பசவண்ணா சிலை முன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அதற்கு அனுமதி தருமாறும் குமாரசாமி முதல்வரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த எதியூரப்பா , சட்டப்படி போராட்டம் நடத்துவதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ள சுதந்திர பூங்காவில் குமாரசாமி உண்ணாவிரதம் இருக்கட்டும் என்றார்.












Click it and Unblock the Notifications