2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அலையில் சிக்கி உருண்ட 3வது திமுக தலைவர் தயாநிதி மாறன்!
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள 3வது திமுக தலைவராக தயாநிதி மாறன் உருவெடுத்துள்ளார். மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி பதவியை இழந்த 2வது திமுக மத்திய அமைச்சராகவும் அவர் மாறியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் நாட்டையே உலுக்கியபோது அத்தனை பேரும் பாய்ந்தது ராசாவைக் குறி வைத்துத்தான். ஆனால் அப்போதே தயாநிதி மாறன் பேச்சும் அடிபட்டது. இருப்பினும் ராசாவைக் குறி வைத்தே அத்தனை அம்புகளும் பாய்ந்ததால், அதில் பதுங்கி அப்போதைக்கு தப்பினார் தயாநிதி மாறன்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து கலைஞர் டிவிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் பாய்ந்ததாக எழுந்த இன்னொரு பெரும் பரபரப்பைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்போதும் தயாநிதி மாறன் மட்டும் தப்பியது எப்படி என்ற கேள்வி அலைகள் எழுந்தன.
இந்த நிலையில், ஏர்செல் முன்னாள் தலைவர் சிவசங்கரன் ரூபத்தில் தயாநிதி மாறனின் கழுத்துக்கு கத்தி வந்து சேர்ந்தது. சிபிஐயிடம் சிவசங்கரன் கொடுத்த ஆணித்தரமான வாக்குமூலம், தயாநிதி மாறனை உடும்புப் பிடியாக பிடிக்க பேருதவியாக அமைந்தது.
ஏர்செல் நிறுவனத்தை மிரட்டியது, மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்தது உள்ளிட்டவற்றில் தயாநிதி மாறனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் சிக்கியதால் இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியது சிபிஐ. மேலும் நேற்று கோர்ட்டில் தயாநிதி மாறன் செய்த தவறுகளை அது அம்பலப்படுத்தியதால் தயாநிதி மாறனின் பதவிக்கு கிட்டத்தட்ட நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையி்ல்தான் இன்று பதவி விலகியுள்ளார் தயாநிதி மாறன். தயாநிதி மாறன் பதவி விலகல் விவகாரத்தில் திமுக தரப்பிலிருந்து எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்க முடியாத நிலை. மேலும் தங்களது அத்தனை கஷ்டத்திற்கும் காரணமானவர் தயாநிதி மாறன் என்று திமுகவினர் கருதுவதால், அவரது விஷயத்தில் அதி வேகமாக முடிவெடுத்து விட்டது திமுக தலைமை.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி இதுவரை 3 திமுக முக்கியத் தலைவர்கள் புகழேணியிலிருந்து இறங்கியுள்ள நிலையில் இனி அடுத்து தயாநிதி மாறனின் அண்ணனும், சன் டிவி குழும தலைவருமான கலாநிதி மாறன் மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.
விரைவில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மீது வழக்குகள் பாயும் என்று தெரிகிறது. அதன் பின்னர் தயாநிதி மாறன் கைது செய்யப்படக் கூடும் என்றும் எதிர்பார்கக்ப்படுகிறது. அதேபோல கலாநிதி மாறனும் கைதாவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications