சொத்தை எழுதித் தராத தாய், தந்தையைக் கொன்று செப்டிக் டேங்கில் போட்ட எஸ்.ஐ. கைது
வேலூர்: சொத்தை எழுதித் தர மறுத்த தாய், தந்தையை கொடூரமாகக் கொலை செய்து பிணத்தை தனது வீட்டில் செப்டிக் டேங்க்கில் போட்டுள்ளார் சென்னையைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தற்போது எலும்புக் கூடுகளை போலீஸார் கைப்பற்றி அந்த சப் இன்ஸ்பெக்டரைக் கைது செய்துள்ளனர்.
நெஞ்சைப் பதற வைக்கும் இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:
சென்னையைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம். 48 வயதாகும் இவர் கொரட்டூரில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். இவரது தந்தை லோகநாதன் மதுரவாயர் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். தாயார் பெயர் சிந்தாமணி. இவர்கள் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள பெத்தலேகம் நகர் 7வது தெருவில் உள்ள தங்களது சொந்த வீட்டில் வசித்து வந்தனர். கடந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி முதல் இவர்களைக் காணவில்லை.
இந்த நிலையில், சமீபத்தில் ஆம்பூர் வந்த ஜார்ஜ், அங்குள்ள காவல் நிலையத்தை அணுகி, தனது வீட்டு செப்டிக் டேங்க்கில் ஒரு ஆண், பெண் மண்டை ஓடுகள் இருப்பதாக கூறினார். இதையடுத்து ஓடி வந்த போலீஸார் பார்த்தபோது, டேங்க்கில் இரண்டு எலும்புக் கூடுகள் கிடப்பதைப் பார்த்து திடுக்கிட்டனர். அதை மீட்டு விசாரணை நடத்தியபோது அது ஜார்ஜின் தந்தை, தாய் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது ஜார்ஜ் மீதும், அவரது உறவினர் ஜான் விக்டர் என்பவர் மீதும் சந்தேகம் வந்தது. போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தியதில் இவர்கள் இருவரும் சேர்ந்துதான் லோகநாதன், சி்ந்தாமணியைக் கொலை செய்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்நது இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
தாய், தந்தை வசித்து வந்த சொந்த வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு ஜார்ஜ் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அவரது பெற்றோர் மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜார்ஜ், புத்தி கெட்டுப் போய் தனது தாய், தந்தையை கொடூரமாக தலையணையை வைத்து மூச்சடைக்கச் செய்து கொலை செய்தார். பின்னர் விக்டருடன் சேர்ந்து உடலை செப்டிக் டேங்க்கில் போட்டு விட்டார்.
பரிதாபமாக உயிரிழந்த லோகநாதன், சிந்தாமணி தம்பதிக்கு ஜார்ஜ் ஒரே மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிந்தாமணியின் மறைவுக்குப் பின்னர் சொத்து ஜார்ஜுக்கு வரும் என்று கூறியிருந்தார் லோகநாதன். அதைப் பொறுக்க முடியாமல் இப்படி கொடூர முடிவை எடுத்துள்ளார் ஜார்ஜ் என்பது அந்தப் பகுதியினரை வேதனை அடையச் செய்துள்ளது.