எம்.பிக்களுக்கான தொகுதி வளர்ச்சி நிதி ரூ. 2 கோடியிலிருந்து ரூ. 5 கோடியாக உயர்வு
டெல்லி: நாடாளு்மன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுதி வளர்ச்சி நிதி ஆண்டுக்கு ரூ. 2 கோடி என்பதிலிருந்து ரூ. 5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அப்போது இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
இந்த ரூ.5 கோடி நிதியில் 2 சதவீத தொகை, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு இந்தத் திட்டம் முறையாக செயல்படுவது உறுதி செய்யப்படும். 2011-12ம் நிதியாண்டிலிருந்து தொகை உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த அதிகரிப்பு மூலம் மத்திய அறசுக்கு ஆண்டுக்கு ரூ. 3950 கோடி கூடுதல் செலவாகும்.
இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், எம்.பிக்களின் தொகுதி வளர்ச்சி நிதியை அதிகரித்துள்ளதன் மூலம் ஒவ்வொரு தொகுதியும் பல்வேறு பலன்களைப் பெற்று ஏற்றம் அடைய முடியும். தொகுதி மக்களின் பல்வேறு குறைகளை இதன் மூலம் தீர்த்து வைக்க முடியும். தொகுதியை சிறந்த முறையில் முன்னேற்றமடையச் செய்ய இது உதவும் என்றார்.
கடந்த 1993-94ம் ஆண்டு முதல் எம்.பி தொகுதி வளர்ச்சி நிதித் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டம் தொடங்கிய காலத்திலிருந்து 2011 மார்ச் 31ம் தேதி வரை எம்.பிக்கள் 13.87 லட்சம் பணிகளை தொகுதி வளர்ச்சி நிதி மூலம் பரிந்துரைத்துள்ளனர். இதில் மாவட்ட நிர்வாகத்தால் 12.30 லட்சம் பணிகள் அங்கீகரிக்கப்பட்டு, அதில், 11.24 லட்சம் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
அதேபோல திட்டம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து 2011 மார்ச் 31ம் தேதி வரை மொத்தம் ரூ. 22,490.57 கோடி அளவுக்கு வளர்ச்சி நிதி விடுவிக்கப்பட்டு, அதில், ரூ. 20,454.56 கோடி செலவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications