உலகை உலுக்கிய இலங்கை போர்க்குற்ற வீடியோ உண்மைதான்- சேனல் 4
லண்டன்: உலகை உலுக்கிய இலங்கை ராணுவத்தின் மிகக் கொடூரமான தாக்குதல் காட்சிகள் உண்மைதான். அவர்கள் சித்திரவதை செய்த, கோரமான முறையில் கொலை செய்தவர்கள் தமிழர்கள் என்று லண்டனைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக மக்களின் இதயங்களை உறைய வைத்துள்ள கொடூரக் காட்சிகளைத் தொகுத்து இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் சேனல் 4 நிறுவனம் வெளியிட்டது. இந்த கொலை பாதக கொடூரக் காட்சிகள் அடங்கிய டாக்குமென்டரிப் படம் உலக மக்களால் பரபரப்புடன் பார்க்கப்பட்டு வருகிறது.
ஈழப் பேரின் கடைசிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தினர் ஆடிய கொலை வெறியாட்டம் இதில் இடம் பெற்றுள்ளது. தமிழர்களை கொடூரமாக சுட்டுக் கொல்வது, உடல்களை கத்தியால் குத்திக் குத்தி மகா கொடூரமாக நடந்து கொண்ட இலங்கை ராணுவத்தினரின் வெறிச் செயல் உள்ளிட்டவற்றை படம் பிடித்துக் காட்டுவதாக இந்த டாக்குமென்டரிப் படக் காட்கிகள் உள்ளன.
இந்த டாக்குமென்டரியை தற்போது இந்தியாவில் ஹெட்லைன்ஸ் டிவி தொடர்ந்து ஒளிபரப்பு செய்து வருகிறது. நேற்றும், நேற்று முன்தினமும் இந்த டாக்குமென்டரி காட்டப்பட்டது. இன்று இரவு 10 மணிக்கும் காட்டப்படுகிறது.
இந்த நிலையில், இந்த வீடியோ காட்சிகள் பொய்யானவை, மார்பிங் செய்யப்பட்டவை என்று இலங்கை அரசு பச்சைப் பொய்யைக் கூறியிருந்தது. ஆனால் இதை சேனல் 4 நிறுவனம் தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தக் காட்சிகள் அனைத்தும் நவீன முறையில் பரிசோதிக்கப்பட்டு, உண்மையானவைதான் என்று உறுதிசெய்து கொண்ட பின்னரே தயாரிக்கப்பட்டதாக சேனல் 4 தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே காட்டப்பட்ட வீடியோ காட்சிகளின் தொடர்ச்சிதான் இவை என்றும் அது கூறியுள்ளது.
சர்வதேச அளவில் இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. இலங்கைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. விரைவில் ஐரோப்பிய யூனியனும், காமன்வெல்த் அமைப்பும் இலங்கை மீது கடும் பொருளாதார தடை நடவடிக்கைகளை அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இலங்கை அரசு பெரும் நெருக்கடியில் மூழ்கியுள்ளது.












Click it and Unblock the Notifications