தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்: மீன்கள் விலை உயரும் அபாயம்
தூத்துக்குடி: இரவில் கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி அளிக்கக் கோரி தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 260-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இவை அனைத்தும் அதிகாலை 5 மணிக்கு மீன்பிடிக்க சென்றால் இரவு 9 மணிக்குள் திரும்பி வந்து விட வேண்டும் என மீன்துறை உத்தரவிட்டுள்ளது. இரவு நேரத்தில் கடலில் தங்கி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அண்டை மாவட்டங்களான ராமநாதபுரம், கன்னியாகுமரியில் மீனவர்கள் இரவு நேரத்தில் கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்ட மீனவர்கள் இரவு நேரங்களில் தூத்துக்குடி மாவட்ட கடல் எல்லைக்குள் வந்து மீன்களை பிடித்து சென்று விடுகின்றனர். இதனால் தூத்துக்குடி மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது தூத்துக்குடியிலும் விசைப்படகு தங்குகடல் மீன்பிடிக்கு அனுமதியளிக்க வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே கடந்த மாதம் இருநாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மீன்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் நேற்று முதல் விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 260-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. வேலை நிறுத்தம் நீடித்தால் மீன்கள் வரத்து குறைந்து விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மீன்பிடி சார்பு தொழில்களும் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications