இலாகா ஒதுக்கீட்டில் அதிருப்தி-பதவியேற்பு விழாவுக்கு வராத குருதாஸ் காமத், ஸ்ரீகாந்த் ஜெனா
டெல்லி: தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் குறித்து கடும் அதிருப்தி அடைந்ததால் இணை அமைச்சர்களான குருதாஸ் காமத்தும், ஸ்ரீகாந்த் ஜெனாவும் இன்றைய புதிய அமைச்சர்கள் பதவியேற்புக்கு வராமல் புறக்கணித்தனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் இன்று மாலை பதவியேற்றனர்.
புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பதவிப் பிரமானமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைத்தார்.
தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல் துறை இணையமைச்சராக பதவியேற்றார். இந்த விழாவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குருதாஸ் காமத் மற்றும் ஸ்ரீகாந்த் ஜெனா ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
குருதாஸ் காமத்திற்கு குடிதண்ணீர் மற்றும் சுகாதாரம், ஸ்ரீகாந்த் ஜெனாவுக்கு புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி தரப்பட்டது. ஆனால் இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்தே இருவரும் இன்றைய பதவியேற்பு விழாவுக்கு வரவில்லை.
அழகிரிக்கு 'கை' கொடுத்த ஜெனா
இவர்களில் ஸ்ரீகாந்த் ஜெனாவை யார் மறந்தாலும் தமிழக மக்களும், மு.க.அழகிரியும் மறக்க முடியாது. காரணம், மத்திய ரசாயணத்துறை கேபினட் அமைச்சராக இருப்பவர் அழகிரி. அவருக்குக் கீழ் இணை அமைச்சராக இருந்தவர் ஜெனா.
அழகிரி ஒரு நாள் கூட லோக்சபாவிலோ, ராஜ்யசபாவிலோ எம்.பிக்களின் எந்த ஒரு கேள்விக்கும் பதிலளித்தில்லை. அவருக்குப் பதில் ஜெனாதான் தொடர்ந்து பதிலளித்து வந்தார். கிட்டத்தட்ட அழகிரியின் பிரநிதியாக அவர் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் தற்போது அழகிரியை விட்டு ஜெனாவைப் பிரித்து விட்டார் பிரதமர். அதேசமயம், தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பொறுப்பைக் கொடுத்ததன் மூலம் அழகிரிக்கும் கூட லேசான குட்டு வைத்துள்ளது காங்கிரஸ்.












Click it and Unblock the Notifications