7 அமைச்சர்களுக்கு கல்தா கொடுத்த பிரதமர்- 8 புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்தார்
டெல்லி: அமைச்சரவையிலிருந்து 7 பேரை அதிரடியாக தூக்கியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். அதேசமயம், 8 புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். இவர்களில் ஜிதேந்திரா சிங் மற்றும் மிலிந்த் தியோரா ஆகிய இருவரும் இளம் வயதினர்.
பிக் பிரதர்களான வெளியுறவு, நிதி, உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறையை மட்டும் விட்டு வைத்த பிரதமர் மன்மோகன் சிங், கிட்டத்தட்ட பல முக்கிய துறைகளை புதுப்பித்துள்ளார். தயாநிதி மாறன், முரளி தியோரா உள்பட 7 பேர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தயாநிதியும், முரளி தியோராவும் ஏற்கனவே ராஜினாமா கடிதங்கள் கொடுத்து விட்டனர். மற்றவர்களிடமும் ராஜினாமா கடிதகங்களை வாங்கி அத்தனையையும் குடியரசுத் தலைவருக்கு பிரதமர் அனுப்பி வைத்து விட்டார்.
அதேசமயம், கிஷோர் சந்திர தியோ உள்ளிட்ட 8 புதுமுகங்களுக்கு அமைச்சரவையில் இடம் அளித்துள்ளார். ஜெயந்தி நடராஜன் இதுவரை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வந்தார். தற்போது அவருக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல பபன் சிங் கடோவார், சுதீப் பந்தோபாத்யாயா, ஜிதேந்திரா சிங், மிலிந்த் தியோரா, ராஜீவ் சுக்லா ஆகியோரும் முதல் முறையாக அமைச்சர்களாகியுள்ளனர்.
உருப்படியாக செயல்படாத காரணத்தால் எம்.எஸ்.கில், பி.கே.ஹண்டிக், காந்திலால் பூரியா ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்லனர்.
தயாநிதி மாறன் 2ஜி ஊழல் புகாரில் சிக்கி ராஜினாமா செய்தார். முரளி தியோரா தனது வயோதிகத்தைக் காரணம் காட்டி விலகி விட்டார். அவருக்குப் பதில் அவரது மகன் மிலிந்த் தியோராவுக்கு அமைச்சர் பொறுப்பு தரப்பட்டுள்ளது.
புதியவர்களையும் சேர்த்து தற்போது அமைச்சர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. முன்பு இது 67 ஆக இருந்தது.












Click it and Unblock the Notifications