ராசாவை எம்.பி. பதவியிலிருந்து நீக்கக் கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
அவிநாசி: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவை நீலகிரி தொகுதி எம்.பி. பதவியிலிருந்து நீக்கக் கோரி அவிநாசியில் இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவிநாசி ஒன்றிய, நகர இந்து முன்னணி சார்பில் ஆ. ராசாவை நீலகிரி தொகுதி எம்.பி. பதவியில் இருந்து நீக்கக் கோரி சேவூர் ரோடு பிரிவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். நகரத் தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில பேச்சாளர் பிரபாகரன் கலந்து கொண்டு பேசியதாவது,
நீலகிரி தொகுதி எம்.பி. ஆ. ராசா 2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக திஹார் சிறையில் உள்ளார். இதனால் நீலகிரி தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடக்கவில்லை. மேலும், மருத்துவ உதவி தேவைப்படுவோர் உள்ளிட்ட பலர் எம்.பி.யிடம் கடிதம் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய ஆ. ராசாவை உடனே எம்.பி. பதவியில் இருந்து நீக்கிவிட்டு, இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.
2ஜி ஊழலில் யார், யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறதோ அவர்கள் அனைவரையும் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும்.
ஊழலுக்கு துணை போகும் காங்கிரஸ் கட்சியை மக்கள் அடுத்த தேர்தலில் தோற்கடிப்பார்கள். பாஜக ஆட்சி நடக்கும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications