ப.சிதம்பரம் உள்துறை அமைச்சரான பின்னர் மும்பையில் நடந்த முதல் தாக்குதல்!
மும்பை: மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பொறுப்பேற்ற பின்னர் மும்பையில் முதல் மற்றும் பெரிய தீவிரவாதத் தாக்குதல் இன்று நடந்துள்ளது.
2008ம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல், மகாராஷ்டிர முதல்வர் உள்ளிட்டோர் பதவி விலகினர். ப.சிதம்பரம் உள்துறை அமைச்சரானார்.
அமைச்சர் பதவியேற்றது முதல் நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகவும் திறமையாக கையாண்டு வந்தார் ப.சிதம்பரம் என பாராட்டப்பட்டு வந்தது. உளவு அமைப்புகளை ஒருங்கிணைத்தும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியும் மிகத் திறமையாகவே அவர் செயல்பட்டு வநதார்.
ப.சிதம்பரம் உள்துறை அமைச்சர் பதவிக்கு வந்த பின்னர் நாட்டில் பெரிய அளவிலான தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறவில்லை என்ற நிலை ஏற்பட்டது. மேலும், என்எஸ்ஜி கமாண்டோப் படைகளை மும்பையிலும், சென்னை உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் நிலை நிறுத்தும் முக்கிய முடிவையும் அவர் எடுத்தார்.
பாதுகாப்பு மட்டும் இல்லாமல் கண்காணிப்புப் பணிகளையும் அவர் நாடு முழுவதும் முடுக்கி விட்டார். இந்த நிலையில் ப.சிதம்பரத்திற்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் மும்பையில் இன்று தீவிரவாத தாக்குதல் சம்பவம் நடந்தேறியுள்ளது.