2008 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் மீண்டும் தாக்கிய தீவிரவாதிகள்
மும்பை: 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பைக்குள் புகுந்து பெரும் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் மும்பையை மீண்டும் தீவிரவாதிகள் தாக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் இன்று மாலை அனைவரும் வேலை முடிந்து வீடு திரும்பும் வேளையில் தீவிரவாதிகள் நடத்திய மூன்று வெடிகுண்டுத் தாக்குதல்கள் மும்பை மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி இரவில் மும்பைக்குள் புகுந்த பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பத்து பேர் 3 நாட்களாக நடத்திய பயங்கர தாக்குதல் சம்பவத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட பத்து பேரில் அஜ்மல் கசாப் தவிர மற்ற 9 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் இன்று மீண்டும் மும்பையில் தீவிரவாதிகள் துணிகர தாக்குதல் நடத்தியுள்ளதால் மும்பை மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இத்தனைக்கும் 2008 சம்பவத்திற்குப் பின்னர் வரலாறு காணாத அளவிலான கண்காணிப்பும், பாதுகாப்பும் இருந்து வருகிறது. இதையும் மீறி நடந்துள்ள இந்த தாக்குதல் சம்பவத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சியுற்றுள்ளனர்.
இன்றைய தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான பொருட்களை தொட வேண்டாம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
விமான நிலையம், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications