நெல்லை மாவட்டத்தில் குவியும் நில மோசடி வழக்குகள்- ஒரே மாதத்தில் 55 வழக்குகள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 55 நிலமோசடி புகார்கள் வந்துள்ளதாக எஸ்பி விஜேயந்திர பிதாரி கூறினார்.
தமிழகம் முழுவதும் நில மோசடி, நில அபகரிப்பு, நிலஆக்கிரமிப்பு விவகாரங்களில் காவல்துறையினரின் நடவடிக்கையை முதல்வர் ஜெயலலிதா முடுக்கி விட்டுள்ளார்.
இந்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது பெருமளவில் நிலங்களை அபகரித்த திமுகவினர் சிக்கி வருகின்றனர்.
சாதாரண திமுக பிரமுகர் முதல் பெரிய பெரிய தலைவர்கள் வரை நில அபகரிப்பு வழக்குகளில் சிக்கி வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் ஒரே மாதத்தில் 55 நில மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதுகுறித்து நெல்லை மாவட்ட எஸ்பி விஜேயந்திர பிதாரி கூறுகையில்,
நெல்லை மாவட்டத்தில் நிலமோசடிகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 55 புகார்கள் வந்துள்ளன. அதன்மீது விசாரணை நடந்து வருகிறது.
புகார்கள் உண்மையாக இருந்தால் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இதற்காக ஏடிஎஸ்பி சொக்கலிங்கம், டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 8 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கந்து வட்டி தொடர்பாக 48 பேர்கைது செய்யப்பட்டனர். சாட்சிகள் சரியாக இருந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல்கூலிப்படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மணல் கொள்ளையை தடுக்கவும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் 400 மணல் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாமிரபரணியில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருட்டு மணல் முற்றிலும் ஓழிக்கப்படும். பரப்பாடி கூட்டுறவு வங்கி கொள்ளை முயற்சியில் உள்ளூர்காரர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications