மதுரை - சென்னை தூரந்தோ ரயில் பாதையை மாற்றியமைக்க கோரிக்கை!
மதுரை: மதுரையிலிருந்து சென்னை வரையிலான தூரந்தோ அதிவிரைவு வண்டி வழியின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக்கிருஷ்ணனை ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் செய்யதுபாபு, விஜயராகவன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியுள்ளதாவது,
மதுரையிலிருந்து சென்னை வரையிலான தூரந்தோ அதிவிரைவு வண்டி விரைவில் இயக்கப்படும் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த வண்டி மதுரையிலிருந்து திருச்சி,கரூர், ஜோலார்பேட்டை வழியாக சென்னை செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பயண நேரமும், பயண தூரமும் அதிகமாகிறது. அதிக கட்டணமும் செலுத்த வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு மதுரையிலிருந்து நேர்வழியாக திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்மாவட்டங்களை சேர்ந்த ஏழை எளிய மக்கள் பலர் வட மாநிலங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நேராக வடமாநிலம் செல்ல வசதி ரயில் வசதி இல்லை. சென்னை சென்று அங்கு காத்து இருந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும், தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, மதுரை போன்ற நகரங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு நேரடியாக செல்லும் வகையில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்.
ரயில் கால அட்டவணை புத்தகம் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. இந்த புத்தகம் அனைத்து ரயில் நிலையங்களிலும் கிடைக்க வழி வகை செய்யவேண்டும்.
மேலும் மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை விரைவு வண்டி, டெல்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரயில்களில் தரமான உணவு கிடைக்க உறிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மனுவைப் பெற்றுக் கொண்ட தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷ்ணன் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.












Click it and Unblock the Notifications