வரி உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற சி.பி.எம். கோரிக்கை
மதுரை: ஏழை, எளிய மக்களை பாதிக்கும் தமிழக அரசின் வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு 3900 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் அரசுக்கு கிடைக்கும் வகையில் பல்வேறு பொருட்கள் மீதான விற்பனை வரியை திடீரென உயர்த்தியுள்ளது.
இந்த வரி உயர்வு ஜூலை 12 ம் தேதி முதலே அமலுக்கு வரும் என்றும் நிர்வாக ரீதியான உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் தவறான கொள்கையினால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து உள்ளது.
மேலும், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு மீதான சமீபத்திய விலை உயர்வு அனைத்துத்தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு விற்பனை வரிகளை உயர்த்தி இருப்பது தமிழக மக்களுக்கு கூடுதல் சுமைகளை ஏற்படுத்தும்.
உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றுக்கான 4 சதவிகித வாட் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது எனினும், ஜவுளித்துணிகள், ஆயத்த ஆடைகள், சமையல் எண்ணெய் மற்றும் உணவுப்பொருட்கள் மீதான வரி உயர்வு ஏழை, நடுத்தர மக்களை பெருமளவு பாதிக்கும். எனவே இந்த வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
மேலும், தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆகஸ்ட் 4 முதல் நடைபெற உள்ளது. இந்த பேரவை கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ள சூழலில், 3900 கோடி ரூபாய்க்கு வரிகளை உயர்த்தியிருப்பது சட்டப்பேரவையின் மரபுகளையும், ஜனநாயக நடைமுறையையும் பாதிக்கக்கூடிய செயலாகும்.
இவ்வாறு ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications