இந்தோனேசியாவில் கைதான இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற பிரதமருக்கு வைகோ கோரிக்கை
சென்னை: இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட 89 இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையிலிருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 89 ஈழத் தமிழர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கப்பல் மூலம் நியூசிலாந்துக்குப் பயணமானார்கள்.
அவர்களை சர்வதேச கடல் எல்லையில் இந்தோனேசிய கடற்படையினர் கைது செய்து அந்நாட்டு துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து வலுக்கட்டாயமாக இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு முயற்சித்து வருகின்றனர்.
89 ஈழத் தமிழர்களும் சட்ட விரோதமாகக் குடியேற வந்தவர்கள் அல்ல. சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் நியூசிலாந்தில் அகதியாக தஞ்சம் கேட்கிற உரிமையை தடுக்க முடியாது.
பயணத்தை தடுத்து நிறுத்திய இந்தோனேசிய அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 89 தமிழர்களும் கப்பலை விட்டு இறங்க மாட்டோம் என்று போராடி வருகின்றனர்.
இந்திய அரசு தனது தூதரக உறவுகளின் மூலம் இந்தோனேசிய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து ஈழத் தமிழர்கள் தங்களது பயணத்தைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ கோரியுள்ளார்.
இலங்கையிலிருந்து அகதிகளாக வெளியேறிய இந்தத் தமிழர்கள் மலேசியா சென்று அங்கிருந்து எம்.வி.அலிஸியா (MV Alicia) என்ற கப்பல் மூலம் நியூசிலாந்தில் தஞ்சமடைய புறப்பட்டனர். வழியில் அந்தக் கப்பலை இந்தோனேஷிய கடற்படையினர் தடுத்து, பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர்கள் பயணம் செய்த கப்பல் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது என்று இந்தோனேசிய போலீசார் மூலமாக இலங்கை அரசு கூற வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்:
இந் நிலையில் சென்னையில் ஜூலை 22ம் தேதி ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், ஆட்சி மன்றக் குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம், அவைத்தலைவர் சு.துரைசாமி தலைமையில் ஜூலை 22 ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தாயகத்தில் நடைபெறும் என்று அதில் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வருவதால், அதில் போட்டியிடுவதா இல்லையா, போட்டியிட்டால் தனித்தா, கூட்டணியா என்பதுகுறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த மதிமுக, கேட்ட இடம் கிடைக்காததால், சட்டசபைத் தேர்தலைப் புறக்கணித்து என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications