'எனக்காக யாரிடமும் கையேந்த வேணாம்பா!'- கருணாநிதியிடம் கனிமொழி உருக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. அதில் ஒரு திமுக அமைச்சர் கூட இடம்பெறவில்லை. திமுகவும் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
ஆனால் பிரதமரோ தான் திமுகவுக்கு 2 இடத்தை ஒதுக்கி வைத்திருப்பதாகவும், எப்பொழுது கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
அப்போது கனிமொழி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி உதவவில்லை என கருணாநிதி வருத்தப்பட்டுள்ளார்.
அதற்கு பிரணாப் பதிலளிக்கையில், "எனக்கே காங்கிரஸ் தலைமை செக் வைத்துள்ளது. எனது அலுவலகமே உளவு பார்க்கப்படுகின்றது.
இன்னும் சொல்லப்போனால், கருப்பு பண விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் எனக்கு மேலே என் துறையை கண்காணிக்க 5 பேர் கொண்ட குழுவை நீதிமன்றம் நியமித்துள்ளது", என்று பதிலுக்கு பிரணாப் தனது வேதனையை வெளிப்படுத்தினாராம்.
இந்த நிலையில் 2 ஜி விவகாரத்தில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்.பி.யும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி தனது தந்தைக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளாராம்.
"இனி எனக்காக நீங்கள் யாரிடமும் போய் கையேந்தி நிற்க வேண்டாம். எனக்கு ஜாமீன் கிடைக்க யாரையும் கெஞ்ச வேண்டாம். நமக்கு உதவி செய்யாத மத்திய அரசில் நம் கட்சிக்கு அமைச்சர் பதவியும் வேண்டாம்," என்று கூறியுள்ளாராம்.
இதனால் தான் மத்திய அமைச்சரவையில் திமுக இடம் பெறவில்லை என திமுக தலைவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications