மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர் அட்டாக் பாண்டி கைது
மதுரை: திமுக பிரமுகரும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளருமான அட்டாக் பாண்டியை வீடு அபகரிப்பு வழக்கில் போலீசார் கைது செய்து இருப்பது திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி கல்பனா. மதுரை திருமலை நாயக்கர் மகால் அருகே இவருக்கு சொந்தமான வீடு உள்ளது.
இந்த வீட்டை கீரைத்துறையை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு கடந்த 2004 ம் ஆண்டு ஒத்திக்கு விட்டார். பின்பு அவரிடம் 2007 ம் ஆண்டு பணத்தை திருப்பி கொடுத்து விட்டார். மாரிமுத்து, திமுக தொண்டரணி அமைப்பாளர் அட்டாக் பாண்டியின் தம்பி ஆவார். புறநகர் மாவட்ட திமுக மாணவரணி துணை செயலாளராக இருந்து வருகிறார்.
ஒத்தி முடிந்த பின்னரும் மாரிமுத்து வீட்டை காலி செய்யாமல் அந்த வீட்டை இடித்து விட்டு பொதுக் கழிப்பிடம் கட்டி வசூல் செய்துள்ளார். சி.டி. கடையும் நடத்தி வந்தனர். இது குறித்து மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கல்பனா புகார் செய்தார்.
மாரிமுத்துவின் செயல்களுக்கு அட்டாக் பாண்டியின் உறவினரான திருச்செல்வமு (25) உடந்தையாக இருந்துள்ளார். இவர்கள் உள்பட 5 பேர் இணைந்து போலி ஆவணம் தயாரித்து வீட்டை அபகரித்து கொண்டனர்.
இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனது சொத்தை மீட்டு தர வேண்டும் என்று காவல்துறை கமிஷனரிடம் கல்பனா புகார் கூறியிருந்தார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் ஆணையாளர் கண்ணப்பன் மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார்.
மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அட்டாக் பாண்டி, மாரிமுத்து, திருச்செல்வம், ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலக எரிப்பு வழக்கில் ஒரு குற்றவாளி இந்த அட்டாக் பாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications