தில்ஷன் கொலையாளி மருத்துவமனையில் அனுமதி: ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிக்கை
சென்னை: சிறுவன் தில்ஷன் கொலைவழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கந்தசாமி ராமராஜ் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தீவுத்திடல் ராணுவக் குடியிருப்புக்குள் பாதாம் பழம் பறிக்கச் சென்ற 13 வயது சிறுவன் தில்ஷன் சுட்டுக்கொல்லப்பட்டான். கொலை நடந்த ஒரு வாரத்திற்குள் கொலையாளியான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கந்தசாமி ராமராஜை சிபி-சிஐடி போலீசார் கைது செய்தனர்.
சிறுவனைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும், 8 தோட்டாக்களும் கூவத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் கைதான ராம்ராஜ் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பமே ஒரு ராணுவக் குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து அவரை குடும்பத்தார் யாரும் வந்து பார்க்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த அவருக்கு திடீர் என்று உல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிறையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
இதற்கிடையே கைப்பற்றப்பட்ட துப்பாக்கியும், தோட்டாக்களும் தடவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வந்தவுடன் வழக்கை நடத்த சிபி-சிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சிபி-சிஐடி போலீசார் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications