பாலியல் குற்றவாளி நித்தியானந்தாவை சிறையில் தள்ளக் கோரி போராட்டம்- கி.வீரமணி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலியல் குற்றவாளி நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்து அவரை உடனடியாக சிறையில் தள்ளவேண்டும். அவர் மீதான வழக்கு விசாரணையை விரைவாக நடத்தித் தண்டனை அளிக்க வேண்டும் என்று கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

மனித சக்திக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும், அவன் எவ்வளவுதான் உயர் நிலையில் இருந்தாலும் சரி, அது பித்தலாட்டம், மோச வார்த்தை என்பதை மனதில் உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள் (விடுதலை 20.5.1948) என்றார் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார்.

குறிப்பாக சாமியார்களை இந்த அளவுகோல் பார்வையில் பார்த்தால், அவர்களின் பேச்சுகள், நடவடிக்கைகள் செப்படி வித்தைகள் என்பவையெல்லாம் போலியானவை. திட்டமிட்ட வகையில் மோசடியாக அரங்கேற்றப்பட்டவை என்பதை எளிதிற் விளங்கிக் கொள்ளலாம்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்பதையும் அன்றாட தகவல்கள் நிரூபித்துக் கொண்டு தானிருக்கின்றன.

மக்கள் மத்தியில் பரம்பரைப் பரம்பரையாக ஊறிக் கிடக்கும் பக்தி என்னும் திரை அவர்களின் கண்களை மறைக்கின்ற காரணத்தால், உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்த பிறகும்கூட, அந்தச் சாமியார்களைப் புறக்கணிக்கும் துணிவு முழுமையாக வரவில்லை.

இந்தப் பாமரத்தனமான பக்தர்களின் கோழைத்தனம்தான் நித்தியானந்தா போன்றவர்களுக்கு மறுபடியும் தலையை வெளியுலகுக்குக் காட்டக் கூடிய துணிச்சலைத் தருகிறது.

கருநாடக மாநிலக் காவல் துறை தயாரித்துள்ள குற்றப் பத்திரிகையில் நான் கிருஷ்ணனாம், நீ என்னோட கோபிகையாம்! என்ற வசனத்தை தம் பக்தைகளிடம் அடிக்கடி சொல்லக் கூடியவர் இந்த நித்தியானந்தா! என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றால், இந்த வார்த்தைகளுக்குள் வழிந்தோடும் ஆபாசம் என்ன என்பது வெளிப்படை!.

நித்தியானந்தா தான் செய்யும் காம வெறியாட்ட ஆபாசங்களை சட்ட ரீதியாக ஆக்கிட செய்திருக்கும் ஏற்பாடு இந்த ஆசாமி எவ்வளவுப் பெரிய ஆபத்தானவர், ஆபாசக்காரர் என்பதற்கான ஆதாரமாகும்.

தன் பக்தைகளிடம் இந்த வகையில் ஒப்பந்தம் போட்டுக் கையொப்பம் வாங்கி வைத்து விடுவார். பாலுறவு மூலம் மோட்சத்தை அடைய முடியும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற ஆபாசமான தகவல்கள் 430 பக்கங்களைக் கொண்ட அந்தக் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றிருக்கின்றன.

குறிப்பிட்ட நடிகையுடன் சாமியார் நடத்திய சல்லாபங்கள் ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில்தான், அவரது நீண்ட கால ஆபாச லீலைகள் மக்கள் மத்தியில் அம்பலமானது. பக்தர்களே அவரது ஆசிரமங்களையும், உடைமைகளையும் அடித்து நொறுக்கினர்.

தன்மீது திட்டமிட்ட வகையில் பழி சுமத்தப்பட்டு இருக்கிறது என்று இப்பொழுது சென்னைக்கு வந்து செய்தியாளர்களிடம் பேட்டி கொடுக்கும் இந்த சாமியார், ஏன் வட மாநிலங்களில் அப்பொழுது ஓடி ஒளிந்தார்?

ஜாமீனில் வெளிவந்து வழக்கு பாதிக்கும் வகையில் பேட்டி கொடுக்கலாமா?

இப்பொழுதுகூட ஜாமீனில்தான் வெளியில் வந்துள்ளார். வழக்கு பெங்களூரில் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் வழக்கைப் பாதிக்கும் வகையிலும், சாட்சிகள்மீது தனது செல்வாக்கைத் திணிக்கும் தன்மையிலும் பேட்டி கொடுத்திருப்பது சட்டப் பார்வையில் சரியானதுதானா?

ஜாமீனை ரத்துசெய்து மீண்டும் அவரை சிறையில் தள்ளுவதற்கு சட்ட ரீதியாகவே வாய்ப்பு இருக்கிறது. நீதிமன்றம் இரண்டொரு நாளில் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கும் என்று தெரிகிறது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வீடியோ போலியானதல்ல என்று அறிவியல் ரீதியாக சோதிக்கப்பட்டு, அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருநாடக மாநிலக் காவல்துறையும், அட்வகேட் ஜெனரலும்கூட கூறியுள்ள நிலையில் அது போலியானது என்று சாதிக்கப் பார்க்கிறார் நித்யானந்தா. பெங்களூரில் நீதிமன்றத்தில் அதனை நிரூபித்து வெளியில் வர வேண்டியது தானே சம்பந்தம் இல்லாமல் சென்னைக்கு வந்து ஆர்ப்பரிப்பானேன்?

ஆண்டவனுடன் அவர் பேசும் (?) ஆன்மீக சக்தி எங்கே போயிற்று? எதற்காகக் காவல்துறையிடம் புகார் கொடுக்கிறார்?

18 மாதங்களுக்குப் பிறகு நித்தியானந்தா சென்னைக்கு வந்து செய்தியாளர்களைச் சந்தித்து இருப்பதும், குறிப்பிட்ட ஊடகங்கள்மீது காவல் துறையிடம் புகார் கொடுத்திருப்பதும் ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் பேசி இருப்பதும் எதன் அடிப்படையில்?

தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருக்கும் ஆட்சி மாற்றம் தங்களுக்கு சாதகமாக இருக்கும் கை கொடுக்கும் என்ற தைரியத்தில்தான் இது நடந்திருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது. இந்த நிலை தமிழக அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகாது மாறாகக் கெட்ட பெயரை ஏற்படுத்தக் கூடியதுமாகும். அரசியல் கண் கொண்டு பார்க்கப்படக் கூடிய பிரச்சினையும் இது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

ஜெகத் குரு என்று சொல்லப்படுகிற சங்கராச் சாரியாரையே கைது செய்து சிறையில் அடைத்த துணிச்சலுக்குச் சொந்தக்காரராகக் கருதப்படுபவர் முதல்வர் ஜெயலலிதா.

அதே நிலைப்பாட்டில் நித்யானந்தா விவகாரத்திலும் நடந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளார். பெண்களை மய்யமாக வைத்து குற்றம் சுமத்தப் பட்டுள்ள ஒருவரின் விஷயத்தில் பெண்ணாக இருக்கக் கூடிய முதல்வர் கூடுதல் கவனத்துடன் கடமை ஆற்ற வேண்டும் என்பது பெரும்பாலான நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

ஒழுக்கக்கேட்டுக்குத் துணை போக கூடாது. எல்லாவற்றிலும் அரசியல் பார்வை என்பது எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும்.

இந்த வகையில் நித்தியானந்தா மீதான வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தித் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது விசாரணையைப் பாதிக்கும் வகையிலும், சாட்சிகளை அச்சுறுத்தும் தலைமையிலும் சென்னைக்கு வந்து பகிரங்கமாக பேட்டியளித் தது கண்டிப்பாக நீதிமன்ற அவமதிப்பு செயல் என்பதால் ஜாமீனை ரத்து செய்து மீண்டும் அவரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியும் திராவிடர் கழக மகளிரணி மற்றும் இளைஞரணி சார்பில் வரும் 23ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தும் என்று அறிவிக்கப்படுகிறது.

கழகத் தோழர்கள் மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையைக் கொண்டு சேர்க்கும் வகை யிலும், கருநாடக அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று வீரமணி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+