குமரியில் நள்ளிரவில் 3 பெண்கள் லாக்கப்பில் அடைப்பு
தக்கலை: தக்கலை அருகே போலீசார் 3 பெண்களை நள்ளிரவில் லாக்கப்பில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரகோவில் செல்லும் சாலையில் கோணியன்குளத்தில் கரை பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்டிருந்தது. கடந்த 9-ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செயது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குமாரகோவில் பகுதியைச் சேர்ந்த குமாரதாஸ் என்பவர் வீட்டுக்கு சென்ற போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை விசாரணை செய்ய வேண்டும் என்று வீட்டில் இருந்தவர்களிடம் கூறியுள்ளனர். அப்போது வீட்டில் அவர் இல்லை. இதனைத் தொடர்ந்து அவரது தாயார் பகவதியம்மாள், மனைவி ஷீபா, சகோதரி தங்கம் ஆகியோரை போலீசார் நள்ளிரவு தக்கலை காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
இது குறித்து பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணனிடம் குமாரதாசின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் முறையிட்டனர். இதையடுத்து பொன். ராதாகிருஷ்ணன் மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் உள்ளிட்டோர் நேற்று தக்கலை போலீஸ் நிலையம் சென்று 3 பெண்களையும் எங்கே வைத்துள்ளீர்கள் என்று கேட்டனர்.
அப்படி யாரும் இங்கில்லை என போலீசார் மறுத்தனர். அவர்களை விடுவித்தால் தான் நான் வெளியே செல்வேன் என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து டிஎஸ்பி சுந்தர்ராஜ் வந்து பொன். ராதாகிருஷ்ணனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அங்கிருந்த 3 பெண்களும் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், சந்தேகத்தின் பேரில் பெண் போலீசார் துணையின்றி கைது செய்து கொண்டு வந்தது தவறு. நள்ளிரவில் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன, இதுபோன்ற செயல்கள் காவல்துறைக்கு நல்லது அல்ல என்றார்.












Click it and Unblock the Notifications