சமச்சீர் கல்வி வழக்கு தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய வேண்டாம்- அரசுக்குத் தலைவர்கள் கோரிக்கை
சென்னை: சமச்சீர் கல்வித் திட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும் என்று இடதுசாரிகள், பாமக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
வேண்டாம் மேல் முறையீடு-ராமதாஸ்
இதுதொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:
தர்மத்தின் வாழ்வுவதன்னை சூதுகவ்வும்: தர்மம் மறுபடியும் வெல்லக் காண்போம் என்ற பாரதியாரின் கூற்றுக்கிணங்க, தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வித் திட்டத்தை கிடப்பில் போட தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் முறியடித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் நடப்பாண்டிலிருந்தே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
சமத்துவ சமுதாயம் ஏற்பட சமச்சீர்க் கல்விதான் முதல்படி என்பதால், சமச்சீர்க் கல்வியை ஏற்படுத்த பாமக கடந்த 15 ஆண்டுகளாகப் போராடி வருகிறது. பாமகவின் முயற்சியால் தான் தமிழகத்தில் கடந்த ஆண்டு ஒன்றாம் வகுப்புக்கும் 6ஆம் வகுப்புக்கும் சமச்சீர்க் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், புதிதாக பதவியேற்ற அதிமுக அரசு சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக பல வழிகளிலும் முயன்றது. ஆனால் அரசு மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்து, சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.
எனினும், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாத தமிழக அரசு, சமச்சீர்க் கல்வித் திட்டத்தை எதிர்த்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சாபத்திற்கு ஆளாகியுள்ளது.
சமச்சீர்க் கல்வித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு கடைப்பிடித்த பிடிவாத போக்கினால், கடந்த 2 மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்குச் சென்றும், பாடம் படிக்க முடியாமல் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர்.
பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படாததால் முதல் பருவத் தேர்வு நடைபெறவில்லை. செம்படம்பர் மாதத்தில் காலாண்டுத் தேர்வு நடத்த வேண்டுமானால் அதற்கு இப்போதிலிருந்தாவது பாடங்களை தொடங்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்தால்கூட பரவாயில்லை. நாங்கள் எடுத்த முடிவை செயல்படுத்தியே தீருவோம் என்பதுபோல பொறுப்பற்ற வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
சமச்சீர்க் கல்வியை எதிர்த்து ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அதற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெளிவாக கூறிவிட்டனர். எனவே மீண்டும் மேல்முறையீடு செய்வதால் எந்தப் பயனும் இல்லை. இதை உணர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் திட்டத்தை கைவிட்டு, உயர்நீதிமன்ற அறிவுரைப்படி தமிழ்நாட்டில் உடனடியாக சமச்சீர்க் கல்வித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தவிர்க்கப்பட வேண்டும்-தா.பாண்டியன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சமச்சீர் கல்வி திட்டம் தேவை என்பதனையும் காலதாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதனையும் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது.
தமிழ்நாடு அரசும், நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர்கள் மூலம் சமச்சீர் கல்வி கொள்கைதான் தங்களது நிலை என்று உறுதிப்படுத்தி உள்ளது.
தற்போது வெளியாகி உள்ள தமிழ்நாடு உயர்நீதிமன்ற தீர்ப்பு சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தை குறிப்பிட்டதோடு, இந்த ஆண்டு ஜுன் மாதம் துவங்கிய பள்ளிகளில் 60 நாட்கள் ஆனபிறகும் படிக்க வேண்டிய புத்தகங்கள் வழங்கப்படாது இருப்பதால், குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட பாடபுத்தகங்களை 22 ம் தேதிக்குள் வழங்கிவிடுமாறு ஆணையிட்டுள்ளது.
அதே தீர்ப்பில் தமிழ்நாடு அரசு பாடதிட்டங்கள் செழுமை படுத்தபட வேண்டும் என்று கூறிய மனுவை ஏற்று செம்மைபடுத்தலாம் அதை வருகிற ஆண்டில் பயன்படுத்திகொள்ளலாம் என தீர்பளித்திருப்பது, மாணவர் பெற்றோர்கள், கல்வியாளர்களால் வரவேற்கபடுகிறது.
இந்த தீர்ப்பில் தமிழக அரசின் நடவடிக்கைகளை தடுப்பதாகவோ குறைகாண்பதாகவோ எந்த வாசகமும் இல்லாத நிலையில் மேல் முறையீடு தவிர்க்கப்படவேண்டும் என்ற மக்களின் உணர்வை நாங்கள் வற்புறுத்துகிறோம்.
நீதிக்குத் தலை வணங்குங்கள்-தங்கபாலு
காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறுகையில், இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல் செய்ய வேண்டும், அதற்கான புத்தகங்களை இந்த மாதம் 22-ம் தேதிக்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது. சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்யவில்லை என்றும் குறைகளை நீக்கி அடுத்த ஆண்டு அமல் செய்வோம் என்றும்தான் உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு கூறியுள்ளது.
எனவே உயர் நீதிமன்றத்தின் இத் தீர்ப்பு அரசுக்கு வெற்றியோ தோல்வியோ அல்ல. எனவே, கெÜரவம் பார்க்காமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்
பிடிவாதம் வேண்டாம்-திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில்,
சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது.
மேல்முறையீடு செய்யத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது மாணவர்களின் கல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்படும் பிடிவாதப் போக்கை வெளிப்படுத்துகிறது.
மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பெருந்தன்மையோடு இப் பிரச்னையை அணுக வேண்டும்.












Click it and Unblock the Notifications