தொலைபேசி ஒட்டுக்கேட்பு: முர்டோச், ஸ்காட்லாந்து யார்ட் தலைவரிடம் விசாரணை
லண்டன்: தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக தனது பதவியை ராஜினாமா செய்த ஸ்காட்லாந்து யார்ட் தலைவர் சர். பால் ஸ்டீபன்சனிடம் அந்நாட்டு எம்.பி.க்கள் விசாரணை நடத்துகின்றனர்.
இங்கிலாந்தின் பிரபல பத்திரிக்கை த நியூஸ் ஆப் தி வேர்ல்ட் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் ஸ்காட்லாந்து யார்ட் தலைவர் சர் பால் ஸ்டீபன்சன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
பிரச்சனையில் சிக்கியுள்ள பத்திரிக்கையின் ஊழியர் அளித்த பல்வேறு சலுகைகளை அனுபவித்ததாக பால் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
த நியூஸ் ஆப் தி வேர்ல்ட் பத்திரிக்கையின் முன்னாள் துணை எடிட்டர் நீல்ஸ் வாலிஸ் பாலின் ஆலோசகராக இருந்துள்ளார். இந்த நீல்ஸ் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் பால் ஸ்டீபன்சனை விசாரித்தனர்.
விசாரணையில் அவர் கூறியதாவது,
நான் நீல்ஸ் வாலிஸை பணியமர்த்தியதில் தவறில்லை. அவருக்கு தொலைபேசி ஒட்டுக் கேட்பில் தொடர்பிருப்பதே எனக்கு கடந்த ஜனவரியில் தான் தெரியும். வாலிஸ் எனக்கு பகுதி நேர ஆலோசகராகத் தான் இருந்தார்.
நான் எந்தத் தவறும் செய்யவில்லை. வழக்கை திசை திருப்ப வேண்டாம் என்று தான் பதவியை ராஜினாமா செய்தேன். அதை லண்டன் மேயர் தவறாக புரிந்து கொண்டார்.
நான் குற்றவாளிகளுடன் எந்த வித தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. நான் பிரதமர் டேவிட் காமரூனைத் தாக்கி எதுவும் கூறவில்லை என்றார்.
ஸ்டீபன்சனை ராஜினாமா செய்யக் கட்டாயப்படுத்தவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய பத்திரிக்கையில் இருந்து விலகிய ஆன்டி கூல்சன் இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூனின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். தொலைபேசி ஒட்டுக் கேட்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பால் ஸ்டீபன்சன் தவிர ஜான் ஏட்ஸ் என்னும் போலீஸ் உயர் அதிகாரியும் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஏட்ஸ், பத்திரிக்கை உரிமையாளர் ரூபர்ட் முர்டோச் மற்றும் அவர் மகன் ஜேம்ஸிடம் எம்.பிக்கள் விசாரணை நடத்தவிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications