திருச்சுழியில் அரசுக் கல்லூரி தொடங்காதது ஏன்?: தமிழக அரசுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்
விருதுநகர்: திருச்சுழி தொகுதியில் அறிவிக்கப்பட்டபடி அரசு கலைக் கல்லூரியை துவங்காததற்கு அதிமுக அரசுக்கு திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் அமைச்சரும், திருச்சுழி திமுக சட்டசபை உறுப்பினருமான தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி ஒன்றியப் பகுதிகள் மிகவும் பின்தங்கிய பகுதிகளாகும்.
இதனால் திருச்சுழியில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும் என கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய முதல்வர் ஜெயலலிதா, திருச்சுழியில் கல்லூரியைத் தொடங்கி வைப்பார் என பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்தனர்.
ஆனால் திருச்சுழியை புறக்கணித்துவி்ட்டு, அக்கல்லூரியை வேறு இடத்தில் துவக்க மாற்றம் செய்துள்ளனர். இதற்காக காமராஜர் பல்கலைக்கழகம் வாயிலாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
திருச்சுழி சட்டசபை தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லை. இந்நிலையில் திருச்சுழியுடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட பிற இடங்களில் எந்த மாற்றமும் இன்றி கல்லூரிகளைத் தொடங்கி உள்ளனர்.
திருச்சுழி மக்கள் திமுக உறுப்பினரை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுத்த ஒரே காரணத்திற்காக அரசியல் பழிவாங்கும் நோக்குடன் அரசு கலைக் கல்லூரியை வேறு பகுதிக்கு மாற்றியுள்ளனர். இது திருச்சுழி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.
திருச்சுழி பகுதி மாணவர்களின் எதிர்காலத்தை வேரறுக்கும் இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விவகாரம் குறித்து திமுக தலைமை அனுமதி பெற்று மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவி்த்துள்ளார்.












Click it and Unblock the Notifications