அதிர்ச்சி தரும் அரிசி விலை... மூட்டைக்கு ரூ 100 திடீர் உயர்வு!

வரிகள் உயர்வு, பல்வேறு பொருள்களின் விலை உயர்வு என வரிசையாக விலை உயர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அடுத்து மின் கட்டண உயர்வும் வரவிருக்கிறது.
இந்த நிலையில் இன்று அரிசி விலை மூட்டைக்கு ரூ 100 வரை உயர்ந்துள்ளது. பொன்னி அரிசி, கர்நாடக அரிசி மற்றும் பச்சரிசி ஆகியவற்றின் விலை கடந்த மாதத்தை விட கிலோவிற்கு ரூ. 2 முதல் 4 வரை உயர்ந்துள்ளது. 25 கிலோ மூட்டை ரூ. 50 முதல் ரூ. 100 வரை கூடியுள்ளது. 25 கிலோ மூட்டை முதல் தர பொன்ன அரிசி கடந்த மாதம் ரூ. 780 விற்கப்பட்டது.
அவை தற்போது ரூ. 870க்கு கடைகளில் விற்கப்படுகிறது. ரூ. 90 உயர்ந்துள்ளது. ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ. 200 முதல் ரூ. 300 வரை அதிகரித்துள்ளது. கர்நாடக பொன்னி அரிசி கிலோ ரூ. 22-க்கு விற்கப்பட்டது. இப்போது அது ரூ. 26 ஆக உயர்ந்துள்ளது. 25 கிலோ மூட்டை ரூ. 550-ல் இருந்து ரூ. 650 ஆக உயர்ந்துள்ளது.
இதே போல பி.பி.டி. வகை அரிசியும், பச்சிரியும் கிலோவிற்கு ரூ. 2 முதல் ரூ. 4 வரை உயர்ந்துள்ளது. ஐ.ஆர். 45 ரக அரிசி கிலோ ரூ. 15-க்கு கடந்த வாரத்தில் விற்கப்பட்டது. இப்போது ரூ. 18-க்கு விற்கப்படுகிறது. அரிசி விலை சென்னை நகரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உயர்ந்துள்ளது.
தனியார் பால் விலையும் உயர்வு
தனியார் பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. சில தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ. 2 விலை கூட்டியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்த நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியது நினைவிருக்கலாம்.
இந்த விலை உயர்வுகளை தமிழக அரசு அமைதியாக வேடிக்கைப் பார்ப்பது மக்களுக்கு மேலும் அதிர்ச்சி தருவதாக உள்ளது.












Click it and Unblock the Notifications