உஸ்பெகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: 13 பேர் பலி, 86 பேர் காயம்
அல்மாட்டி: உஸ்பெகிஸ்தானின் பெர்கானா மாகாணத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 13 பேர் பலியாகினர், 86 பேர் காயம் அடைந்தனர்.
கிர்கிஸ்தானின் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. இந்த மையப்பகுதி கிழக்கு உஸ்பெகிஸ்தானின் பெர்கானா நகரில் இருந்து 35 கிமீ தொலைவில் தான் உள்ளது.
கிர்கிஸ்தானை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் பெர்காணா மாகாணத்தில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கி 13 பேர் உயிர் இழந்தனர், 86 பேர் காயம் அடைந்தனர்.
ஆனால் நிலநடுக்கத்தின் தாக்கம் பற்றிய முழுமையான தகவல்களை அந்நாட்டு அதிகாரிகள் வெளியிடவில்லை.
மீட்புப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமோவ் உத்தரவிட்டுள்ளார். அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் நிலநடுக்கத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நாட்டின் தலைமை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
கிர்கிஸ்தானில் உயிர் சேதம் ஏற்பட்டதாக இது வரை தகவல் இல்லை.
நிலநடுக்கவியல் கல்லூரியின் தலைவர் கனத் கூறுகையில்,
கிர்கிஸ்தானில் மக்கள் அதிக அளிவில் இல்லாத பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அங்குள்ள சில கட்டிடங்கள் தான் சேதமடைந்துள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications