நில அபகரிப்பு: இளைஞர் காங். நிர்வாகிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சென்னை: நில அபகரிப்பு வழக்கில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கந்தன். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி. அவரது நண்பர் முரளி. இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி. கந்தனின் தந்தை முருகன் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் தலையாரியாக இருக்கிறார். முருகனிடம் இருந்த அரசு புறம்போக்கு நில பத்திரங்களை கந்தன் திருடி, அதற்கு போலி ஆவணமும் தயாரித்தார்.
தனது நண்பர் முரளியுடன் சேர்ந்து நீலாங்கரையை அடுத்த பெத்தேல் நகர் மக்களை அணுகி அந்த நிலம் தங்களுக்கு சொந்தம் என்றும், உடனே காலி செய்ய வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ரூபன், ராஜி, கலைவாணன், ரகு ஆகியோர் நீலங்கரை போலீசில் புகார் செய்தனர்.
கமிஷனர் திரிபாதியின் உத்தரவின்பேரில் இது குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கடந்த 9-ம் தேதி கந்தன், முரளி ஆகியோரை கைது செய்தனர். அந்த இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு நீலாங்கரை இன்ஸ்பெக்டர் தேவராஜ் கமிஷனர் திரிபாதிக்கு பரிந்துரைத்தார். அவர் கோரிக்கையை ஏற்று அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார்.
அதன்படி அவர்கள் இருவரும் குண்டர்சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நில அபகரிப்பு புகாரில் இவர்கள் தான் முதன்முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications