சட்டசபை தேர்தல் முடிந்ததோடு திமுக கூட்டணியும் முடிந்துவிட்டது: பெஸ்ட் ராமசாமி
ராசிபுரம்: சட்டமன்ற தேர்தல் முடிந்ததோடு திமுகவுடனான கூட்டணியும் முடிந்துவிட்டதாக கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி தெரிவித்துள்ளார்.
கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பாலசுப்பிரமணியம் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள், கட்சியின் வளர்ச்சிப் பணிகள், கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது.
பின்பு அக்கட்சியின் தலைவர் பெஸ்ட் ராமசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் நாங்கள் கூட்டணி வைத்திருந்தோம். இந்த கூட்டணி அந்த தேர்தலுடன் முடிந்துவிட்டது.
இனி வரும் உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தில் விவசாயம், ஜவுளித் தொழில் போன்றவற்றில் நிலவி வரும் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயற்சி எடுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி வைப்போம்.
மேலும், தேர்தலில் எங்கள் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கித் தரும் கட்சியுடன் கூட்டணி வைப்போம். இல்லையெனில் தனித்து போட்டியிடுவோம்.
எங்களுக்கு திமுக, அதிமுக என்று வேறுபாடு எதுவும் கிடையாது. அதிமுக அரசு நன்மை செய்தால் அதனை பாராட்டுவோம்.
தற்போது நடந்து கொண்டிருக்கும் அதிமுக ஆட்சிக்கும், முந்தைய திமுக ஆட்சிக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை.
மக்கள் பிரச்சனை குறித்து தமிழக அரசிடம் தெரிவிப்போம். அரசு அதனை நிறைவேற்றி தராவிட்டால் அதை வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம் என்றார்.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைந்த நிலையில், அக் கூட்டணியில் இருந்து முதலாவது கட்சியாக கொங்குநாடு முன்னேற்ற கழகம் வெளியேறியுள்ளது. இக்கட்சியின் நிலைப்பாடு திமுகவுக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பாமக தலைமை பொதுக்குழு கூட்டம் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. அக்கட்சியும் இது போன்ற நிலைப்பாடு எடுத்தால் அரசியல் அரங்கில் திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications