ராசாவிடம் விசாரணை நடத்தப் போகும் வருமானவரித் துறை!
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ராசா தவிர இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஸ்வான் டெலிகாம் இயக்குநர் வினோத் கோயங்கா, அதன் மேம்பாட்டாளர் ஷாகித் உஸ்மான் பல்வா, ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் கெளதம் ஜோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகியோரிடமும் ஜூலை 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை வருமான வரித் துறை விசாரணை நடத்தலாம் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அனுமதித்தார்.
டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்துக்கு இவர்கள் வழக்கு விசாரணைக்காக கொண்டு வரப்படும் போது வருமான வரித்துறையினர் இவர்களிடம் விசாரணையை மேற்கொள்வர்.
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் பங்குகளை எடிசலாட் நிறுவனத்துக்கு விற்றதில் கிடைத்த கோடிக்கணக்கான வருவாய்க்கு வரி கட்டப்பட்டதா என்று விசாரணை நடத்தப்படவுள்ளது.
ராசாவிடம் அவரது சகோதரர், மனைவி பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் வருமான வரி தொடர்பாக கேள்விகள் கேட்கப்படவுள்ளன.
மேலும் ராசாவின் வருமான வரி தாக்கல் தொடர்பாக முழு ஆய்வும் நடத்தவும் வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே 2ஜி ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பாக தன்னிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு அதிகாரம் இல்லை என்று கூறி ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சண்டோலியா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு அற்பத்தனமானது என்றும், இதற்காக அவருக்கு அதிகபட்ச அபராதம் விதித்து மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ. வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications