திமுக கூட்டணியை பெரும்பாலான காங்கிரஸார் விரும்பவில்லை: ஈவிகேஎஸ்

சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பத்தாவது ஆண்டு நினைவு விழாவில் கலந்து கொண்டார் இளங்கோவன். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட முதல்வர் ஜெயலலிதா விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ஏற்கனவே இடம் ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனால் இதுவரை கட்டியபாடில்லை. ஜெயலலிதா தனது ஆட்சியில் இதை சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.
பின்னர் அரசியல் குறித்து அவர் பேசுகையில்,
தங்கபாலு தனது பதவியிலிருந்து விலகி விட்டார். ராஜினாமா கடிதமும் அனுப்பி விட்டார். அதை மேலிடமும் ஏற்றுக் கொண்டு விட்டது. தற்போது தங்கபாலு தலைவர் இல்லை. கட்சித் தலைமையின் நேரடி ஆளுகையில் தற்போது தமிழக காங்கிரஸ் உள்ளது. புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார். இதற்கான அறிவிப்பை சோனியா காந்தி விரைவில் வெளியிடுவார்.
தன்னுடைய நெருங்கிய நண்பராக இருந்தாலும் கூட சிறைக்குச் சென்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மத்திய அமைச்சர் அழகிரி சந்தித்திருப்பது நெறிமுறைகளை மீறிய செயலாகும்.
கைது செய்யப்பட்டவர்கள் சமூக விரோத சக்திகளாவர். அவர்களோடு அழகிரிக்கு என்ன உறவு வேண்டி உள்ளது?. சிறையில் அவர்களை சந்தித்திருப்பது வழக்கு விசாரணையை பாதிக்கும்.
கொலை வழக்கில் குற்றம் சாட்ட தனது உறவினர் ஒருவரை சேலம் சிறைக்குச் சென்று முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சந்தித்தார். இவருக்கு நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் தகுந்த பதிலடி வழங்கினார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications