கேஎம்சி மருத்துவமனை தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ஜெ. ரூ. 2 லட்சம் நிதி
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான 3 பேரின் குடும்பத்தி்ற்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி அளிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இன்று (23.7.2011) அதிகாலை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக எழுந்த புகை மூட்டத்தில், அம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளான பூந்தமல்லி, செந்நீர்குப்பத்தைச் சேர்ந்த தமிழரசி, கொடுங்கையூர், எருக்கஞ்சேரியைச் சேர்ந்த கிருஷ்ணா பாய் மற்றும் அம்பத்தூரைச் சேர்ந்த நந்தகோபால் ஆகியோர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்துள்ளேன்.
இந்த விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ. 2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், மின்கசிவால் இது போன்ற சம்பவம் ஏற்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும். இது போன்ற சம்பவங்கள் இனி ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எடுக்கப்பட வேண்டும் என்றும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications