இலங்கை தமிழர் பகுதிகளில் ராஜபக்சே கட்சி படுதோல்வி: தமிழ் தேசிய கூட்டணி அமோக வெற்றி

இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் வட கிழக்குப் பகுதிகளில் நேற்று உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்தது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பலத்த ராணுவப் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடந்தது.
இலங்கையில் மொத்தம் 335 உள்ளாட்சி சபைகள் உள்ளன. அவற்றில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6ம் தேதி 234 உள்ளாட்சி சபைகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, அனுராதபுரம், வன்னி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய தமிழர் பகுதிகள் உள்பட சுமார் 100 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை.
இந் நிலையில் நேற்று இந்த 100 உள்ளாட்சிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.
தேர்தல் முடிந்தவுடன் வாக்குப் பெட்டிகள் 383 வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு விடிய, விடிய ஓட்டு எண்ணப்பட்டது.
இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டணி 18 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு எதிராக செயல்படும் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வெறும் 2 இடங்கள் தான் கிடைத்தன.
நாடு முழுவதும் அதிபர் ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி கட்சி 45 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால், தமிழர் பகுதியில் அதிபர் ராஜபக்சேவின் கட்சியால் வெறும் 2 இடங்களைத் தான் கைப்பற்ற முடிந்தது.
சிங்கள கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா ஆகிய கட்சிகள் வடக்குப் பகுதியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
தேர்தல் நடந்து முடிந்துள்ள 65 உள்ளாட்சி அமைப்புகளில் அதிபர் ராஜபக்சேவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணிக்கு 512 கவுன்சிலர்களும், தமிழ் தேசிய கூட்டணிக்கு 183 கவுன்சிலர்களும், சிங்களர் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கு 137 கவுன்சிலர்களும், ஜனதா விமுக்தி பெரமுனா கட்சிக்கு 13 கவுன்சிலர்களும் உள்ளனர்.
விரைவில் கொழும்பு-கிளிநொச்சி விமான சேவை:
இந் நிலையில் கொழும்புவுக்கும் கிளிநொச்சிக்கும் இடையே வரும் 28ம் தேதி முதல் பயணிகள் விமான சேவை தொடங்க உள்ளதாகத் தெரிகிறது.
விமானப் படையின் ஹெலிகொப்டர் பிரிவினால் இந்த சேவை நடத்தப்படவுள்ளது. சுமார் 15 பயணிகள் இந்த விமானத்தில் பயணம் செய்ய முடியும். இதில் கட்டணம் ரூ.7,500 இருக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications