அணுமின் உற்பத்தியில் முதலீடு செய்ய பொதுத்துறை நிறுவனங்கள் ஆர்வம்
வள்ளியூர்: பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அணுமின் உற்பத்தியில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூடன்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் காசிநாத் பாலாஜி தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது முதல் அணு உலையில் வெப்ப நீர் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் மின் தேவையை கருத்தில் கொண்டு என்பிசிஎல் எனப்படும் இந்திய அணுமின் உற்பத்தி கழகத்துடன் இணைந்து அணுமின் உற்பத்தி செய்ய பல பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய தயார் நிலையில் உள்ளன.
தற்போது இந்தியாவில் 4 ஆயிரத்து 780 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அணுமின் உலைகள் இயங்கி வருகின்றன. புதிதாக 6 அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. வரும் 2032-ம் ஆண்டுக்குள் 63 ஆயிரம் மெகாவாட் அணு மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அனல் மின்சாரம் தயாரிப்பதற்கான நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தேசிய அனல் மின் உற்பத்தி கழகம் அணு மின்சார உற்பத்தியில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகியுள்ளது.
இது பற்றி கூடன்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் காசிநாத் பாலாஜி கூறுகையில்,
இந்திய அணு மின் உற்பத்தி கழகம் மிகவும் பாதுகாப்பாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாதவாறு மின்உற்பத்தி செய்வதால் எங்கள் நிறுவனத்துடன் தற்போது தேசிய அலுமினிய உற்பத்தி கழகம் (நெல்கோ), பாரத் மிகு மின் நிலையம்(பெல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கான பேச்சுவார்த்தையில் இந்திய அணுமின் உற்பத்தி கழகம் ஈடுபட்டு வருகிறது. கூடன்குளத்தில் அமைய உள்ள 3வது மற்றும் 4வது அணு உலைகளில் ஏதாவது ஒன்று இந்த நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் அமைக்கப்படலாம் என்றார்.












Click it and Unblock the Notifications