இசையமைப்பாளர்கள் - கவிஞர்களுக்கு ராயல்டி தரத் தேவையில்லை: மும்பை நீதிமன்றம்
மும்பை: திரைப்பட இசையமைப்பாளர்களுக்கு இனி ராயல்டி தரத் தேவையில்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
சினிமாவில் பாடல் எழுதும் கவிஞர்களுக்கும், அவற்றுக்கு இசையமைக்கும் இசை அமைப்பாளர்களுக்கும் படத் தயாரிப்பாளர்கள் சம்பளம் தருகிறார்கள்.
பின்னர், இந்த பாடல்கள் மற்றும் இசையின் உரிமையை படத் தயாரிப்பாளர் பெற்றுக் கொள்கிறார்கள்.
இந்த பாடல்கள், இசையை ஒலிபரப்பும் தனியார் ரேடியோ சேனல்கள், அதற்கான உரிமத்தை பி.பி.எல். என்ற படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு கட்டணம் செலுத்தி பெறுகின்றன.
இந்த பணம் சங்கத்தின் மூலமாக தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரம், ராயல்டி உரிமை என்ற பெயரில் ஒரு தொகையை ஐ.பி.ஆர்.எஸ். என்ற இசையமைப்பாளர்கள் மற்றும் கவிஞர்கள் சங்கத்துக்கும் ரேடியோ சேனல்கள் வழங்குகின்றன.
இந்த நிலையில், ஒலிபரப்பப்படும் பாடல்களுக்காக தயாரிப்பாளர் சங்கத்துக்கு பணம் கொடுப்பதால், கவிஞர்கள் மற்றும் இசையமைப்பாளர் சங்கத்துக்கு ராயல்டி செலுத்த தேவையில்லை என்று உத்தரவிடக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் சில எம்.எம். சேனல்கள் வழக்கு தொடர்ந்தன.
இதை நேற்று விசாரித்த நீதிமன்றம், கவிஞர்கள் மற்றும் இசை அமைப்பாளர்கள் சங்கத்துக்கு ராயல்டி கொடுக்கத் தேவையில்லை என்று பரபரப்பு தீர்ப்பை அளித்தது.
அதேநேரம் நேரடி மேடை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும்போது அவற்றுக்கு ராயல்டி தரவேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய நிலையில் எப்எம் ரேடியோக்கள் அனைத்தும் சினிமா பாடல்களை நம்பியே உள்ளன. எனவே அவை இசையமைப்பாளர்களுக்கு ராயல்டி தரவேண்டிய நிலை. இப்போது வந்துள்ள நீதிமன்ற தீர்ப்பு எப்எம் சேனல்களை துள்ளிக் குதிக்க வைத்துள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய பாடலாசிரியர்களும், இசை அமைப்பாளர்களும் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications