10 ரூபாய் நோட்டைக் கீழே போட்டு எம்.எல்.ஏ செ.கு. தமிழரசனின் ரூ. 50,000 பணம் அபேஸ்!

இந்தியக் குடியரசுக் கட்சி எம்எல்ஏவாக இருப்பவர் செ.கு. தமிழரசன். இவர் தற்காலிக சபாநாயகராகவும் பணியாற்றினார். இந்த நிலையில் நேற்று மதியம் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றார் தமிழரசன்.
அவரது கார் ஹோட்டலுக்கு வெளியே நின்றிருந்தது. டிரைவர் முருகன் காரில் உட்கார்ந்திருந்தார். காருக்குள் ஒரு சூட்கேஸ் வைக்கப்பட்டிருந்தது. அதில் ரூ. 50,000 பணம், வங்கி பாஸ் புத்தகம், பாஸ்போர்ட் உள்ளிட்டவை இருந்தது.
அப்போது அங்கு வந்த ஒரு நபர், முருகனை அழைத்து, கீழே ரூபாய் நோட்டு கிடக்கிறது, உங்களுடையதா என்று பாருங்கள் என்று அழைத்தார். பதறிப் போன முருகன் வேகமாக காரை விட்டு இறங்கி கீழே பார்த்துள்ளார்.
இதைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் காருக்குள் இருந்த சூட்கேஸை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டார். பத்து ரூபாய் நோட்டுக்காக கீழே இறங்கிய முருகன் பணப் பெட்டி பறிபோனதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக ஹோட்டலுக்குச் சென்று எம்எல்ஏவிடம் தகவலைக் கூறினார். இதையடுத்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் தமிழரசன் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications