ஆட்டம் போட்ட வீரபாண்டியார் ஆதரவாளர்கள்-இரவில் போய் 'அள்ளி வந்த' போலீஸார்!
சேலம்: திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் 3 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரித்தபோது, சேலம் நகரில் அவருக்கு ஆதரவாக வன்முறையில் ஈடுபட்ட திமுகவினரை நேற்றிரவில் போலீசார் கைது செய்தனர்.
இந் நிலையில் முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கடந்த இரு நாட்களுக்கு முன் நீதிமன்ற உத்தரவுப்படி சேலம் நகர குற்றப்பிரிவு காவல்நிலையத்தில், காவல்துறை விசாரணையில் இறுந்தபோது, அவருக்கு ஆதரவாக திரண்ட கூட்டத்திலிருந்த சிலர் வன்முறையில் ஈடுபட்டனர்.
அப்போது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்தது காவல் துறை. அதே நேரத்தில் அந்த சம்பவங்களையும் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.
சாலைமறியல் செய்தவர்கள், கடைகளை மூடச் சொன்னவர்கள், சாலையில் போவோர் வருவோர் மீது தாக்குதல் நடத்தியவர்கள், காவல் துறையினர், மற்றும் அதிமுக வினரை கெட்ட வார்த்தைகளில் திட்டியவர்கள், நீதிமன்ற்றத்தில் கண்ணாடிகளை உடைத்தவர்கள் என் அத்தனை திமுகவினரையும் வீடியோவில் பதிவு செய்து வைத்துக் கொண்டனர். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.
நேற்று முன்தினம் மாலை வீரபாண்டி ஆறுமுகம் விடுதலையாகி வீட்டுக்கு சென்ற பின்னர், அவருக்கு ஆதரவாக ஆட்டம் போட்டவர்களும் கலைந்து சென்றனர்.
இந் நிலையில் நேற்றிரவு இவர்களது வீடுகளுக்குப் போய் நின்றன போலீஸ் ஜீப்கள். தூங்கிக் கொண்டிருந்த இவர்களை தட்டி எழுப்பி, ஜீப்பில் அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து வழக்கு போட்டு உள்ளே தள்ளியுள்ளனர் காவல் துறையினர்.
இதில் ராமநாதன் என்ற திமுக தொண்டர் மீது கொலை முயற்சி உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் வீரபாண்டியாரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக மிக ஓவராக ஆட்டம் போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. வழியில் போவோர் வருவோரை எல்லாம் இவர் தாக்கினார். இதில் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு பல் உடைந்து போனது. மொத்தத்தில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் ஜாமீன் நிபந்தனைப்படி சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் தினமும் காலை 8 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகம் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
கையெழுத்திட்ட பின் நிருபர்களிடம் பேசிய அவர், என் மீது போடப்பட்டுள்ள இரு வழக்குகளும் பொய்யானவை. இந்த வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன். திமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடப்படுகிறது. இதுபோன்ற அடக்குமுறையால் திமுகவை பலவீனப்படுத்த முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications