ஆட்சியே போனாலும் பரவாயில்லை... எதியூரப்பா விலக வேண்டும்! - பாஜக

ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்ட பிறகும், முதல்வர் பதவியை மட்டும் விட்டுவிடாமல் தொடர்ந்து வந்தவர் எதியூரப்பா. ஒவ்வொரு முறை நெருக்கடி வரும்போதும் அவர் ராஜினாமா செய்வது போன்ற நெருக்கடி உருவாகும். ஆனால் கடைசி நேரத்தில் தப்பித்துவிடுவார் எதியூரப்பா.
இந்த நிலையில் சுரங்கத் தொழிலில் நடந்த ரூ 16000 கோடி வரையிலான ஊழலில் எதியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நேரடி தொடர்புள்ளதாக லோகாயுக்த சமர்ப்பித்த அறிக்கையைத் தொடர்ந்து, அவர் பதவி விலகியே தீர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
முதலில் மறுத்த எதியூரப்பா, பின்னர் தனக்கு எம்எல்ஏக்கள் மத்தியில் ஆதரவில்லை என்பது தெரிந்ததும் சில நிபந்தனைகளுடன் ராஜினாமாவுக்கு ஒப்புக் கொண்டார். தான் பரிந்துரைப்பவரை மட்டுமே முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதுதான் அவர் முதல் முக்கிய நிபந்தனை. அதில் விஎஸ் ஆச்சார்யா, சதானந்த கவுடா என ஒரு பட்டியல் இருந்தது.
அடுத்து ஆடி மாதம் முடியும் நாளில் ராஜினாமா கடிதம் கொடுப்பதாகக் கூறியிருந்தார். அதன்படி நாளை பிற்பகலில் அவர் ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுப்பார் என கூறப்பட்டது.
மேலும் மூன்று நாட்கள்...
இந்த நிலையில், மத்திய மேலிடப் பார்வையாளர்களாக பாஜக மூத்த தலைவர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங் ஆகியோர் பெங்களூர் வந்துள்ளனர். இன்று காலை அவர்களைச் சந்தித்து இரண்டு மணிநேரம் பேசிய எதியூரப்பா, தனக்கு மேலும் மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனை மேலிடத் தலைவர்கள் ஏற்கவில்லை. இந்த முறை எக்காரணம் கொண்டும் அவகாசம் தர முடியாது என்றும், அவர் நாளைக்குள் பதவி விலக வேண்டும்; அதனால் ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பாக மூத்த தலைவர்கள் எல்கே அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்கள் இந்த முறை எதியூரப்பாவுக்கு வாய்ப்பு தரவே கூடாது என்பதில் உறுதியாக நின்றார்களாம். இதனால் வேறு வழியின்றி ராஜினாமா செய்கிறார் எதியூரப்பா.












Click it and Unblock the Notifications