முக ஸ்டாலின் திடீர் கைது...விடுதலை!

திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருத்துறைப் பூண்டி அருகே மொழிப்போர் தியாகி தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு தஞ்சாவூருக்கு வந்திருந்தார்.
பின்னர் இன்று காலை திருவாரூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். திருவாரூர் மாவட்ட எல்லையில், திருத்துறைப்பூண்டி அருகே கோவில்வன்னி என்னும் இடத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்க திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட தி.மு.க.வினர் காத்திருந்தனர்.
அங்கே மு.க.ஸ்டாலின் வந்ததும், போலீஸார் அவரிடம் ஒரு விசாரணை உள்ளது என்று கூறினர். என்ன என்று கேட்டபோது, சமச்சீர் கல்வியை அமலாக்கக் கோரி திமுகவினர் போராட்டம் நடத்தியபோது பள்ளியில் இருந்து மாணவர்களை வலுக்கட்டாயமாக பஸ்ஸில் திரும்பி அனுப்பினர். அப்போது, கொரடச்சேரி அருகே பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளானதில், திமுகவினரால் திருப்பி அனுப்பப்பட்ட விஜய் என்ற மாணவர் விபத்தில் பலியானார்.
இதற்கு பூண்டி கலைவாணன்தான் காரணம். எனவே விசாரணை நடத்த வேண்டும் என்றனர். பூண்டி கலைவாணனை ஒப்படைக்க இயலாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சாலைமறியல் போராட்டமும் நடந்தது. இதனால் ஸ்டாலினையும் சேர்த்து திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் அழகு திருநாவுக்கரசு, மதிவாணன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், விஜயன் எம்.பி. உள்பட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர் திமுகவினர். தேர்தல் தோல்விக்குப் பிறகு சுணங்கிப் போயிருந்த திமுகவினர், ஸ்டாலின் கைது என்றதும் வீறு கொண்டெழுந்தனர்.
சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் மதியம் 2 மணி வாக்கில் விடுவிக்கப்பட்டார். ஸ்டாலினுடன் வந்த பழனிமாணிக்கம் உள்ளிட்ட திமுக தலைவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக தனது கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "ஆகஸ்ட் 1-ம் தேதி திமுக நடத்தவிருக்கும் பெரும் அறப்போரை நசுக்கவே என்னைக் கைது செய்துள்ளது அதிமுக அரசு," என்று கூறியிருந்தார்.
அவரது கைதைக் கண்டித்து திமுகவினர் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று பிற்பகல் அவரை போலீஸார் விடுவித்துவிட்டனர். இதைத் தொடர்ந்து, கலைவாணனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டிருந்த மண்டபத்தை விட்டு வெளியேறினர்.
ஸ்டாலின் நாடகம்- போலீஸ்
ஸ்டாலின் கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருவாரூர் மாவட்ட எஸ்பி, "ஸ்டாலினை நாங்கள் கைது செய்யவில்லை. மாணவர் ஒருவர் விபத்தில் இறப்பதற்குக் காரணமான சம்பவம் தொடர்பாக மாவட்ட திமுக செயலர் பூண்டி கலைவாணனிடம் விசாரணை நடத்த வந்தோம்; அவரை ஒப்படையுங்கள் என்றோம்.
அதற்கு ஸ்டாலின் தரப்பு மறுத்ததுடன் தானாகவே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கைதாகினர். அவர்களை பாதுகாப்பாக திருவாரூர் அழைத்து வந்தோம். தற்போது, கலைவாணனை மட்டும் விசாரணைக்கு நிறுத்தி வைத்து, மற்றவர்களை விடுவித்துவிட்டோம்," என்றார் அவர்.












Click it and Unblock the Notifications