திருமணத்திற்காக பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி மீண்டும் சிறையில் அடைப்பு
நெல்லை: திருமணத்திற்காக பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி மீண்டும் நேற்று பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லை அருகேயுள்ள பத்தம்டை லெப்பை தெருவைச் சேர்ந்தவர் சேக் சிந்தா மதார். தடை செயயப்பட்ட அமைப்பில் உறுப்பினராக உள்ள இவர் மீது திருச்சி உரையூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இதில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் கடந்த 2007-ம் ஆண்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இவருக்கும் பத்தமடையைச் சேர்ந்த இவரது உறவு பெண்ணுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் ஜூலை 15-ம் தேதி தனக்கும், தனது உறவுக்கார பெண் செய்யதலி பாத்தி்மாவுக்கும் திருமணம் நடப்பதாகவும் அதனால் ஒரு மாதம் தனக்கு பரோல் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பி்ட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருமணத்திற்காக சேக் சிந்தா மதாருக்கு ஜூலை 15-ம் தேதி முதல் 17 நாட்கள் பரோல் விடுமுறை அளிக்குமாறு போலீஸ் மற்றும் சிறை துறைக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் பாளை மத்திய சிறையில் இருந்து கடந்த 14-ம் தேதி சேக் சிந்தா மதார் பத்தமடையிலுள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.
தொடர்ந்து கடந்த 15-ம் தேதி ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் இரு எஸ்.ஐ.க்கள் மற்றும் 22 காவலர்கள் பாதுகாப்புடன் அவருக்கு திருமணம் நடந்தது.
இந்நிலையில் பரோல் விடுமுறை முடிந்து சேக் சிந்தா மதார் நேற்று மாலை பாளை மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications