போரில் அப்பாவி தமிழர்களும் பலியாயினர்: இலங்கை முதல் முறையாக ஒப்புதல்
கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற போரில் அப்பாவிகள் உயிரிழந்தனர் என்பதை அந்நாட்டு அரசு முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தவர்களை ராணுவத்தினர் கொல்லவில்லை என்று மறுத்துள்ளது.
இலங்கை போர் தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளரும் அதிபர் ராஜபக்சேவின் சகோதரருமான கோதய ராஜபக்சே வெளியிட்டுள்ள
'மனித நேய நடவடிக்கை: உண்மை ஆய்வு' என்ற அறிக்கையில்,
இலங்கையில் போர் நடைபெற்ற போது பொது மக்களைக் காக்க இலங்கை அரசு முடிந்தவரை முயற்சித்தது. இதற்காக பாதுகாக்கப்பட்ட பகுதி, தாக்குதல் நடத்தப்படாத இடங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டன. போரில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படக்கூடாது என்பதுதான் கொள்கை.
இது தொடர்பாக ராணுவத்தினருக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் போர் நடைபெறும் இடங்களில் பொதுமக்களும் உயிரிழப்பது தவிர்க்க முடியாதது. அதே நேரத்தில் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்றதாகக் கூறுவது தவறு.
இறுதிப் போரில் 40000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வடபகுதியில் எத்தனை பேர் வசித்து வந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இது தொடர்பாக ஐ.நா. அளித்த அறிக்கையிலேயே 75,000 முதல் 3 லட்சம் வரை என்று வேறுபாடு உள்ளது.
இறுதிப் போரின்போது விடுதலைப் புலிகளின் தலைவர்கள், பொது மக்களை தங்களின் பாதுகாப்புக் கேடயமாகப் பயன்படுத்தினர்.
ராணுவரீதியாக விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், சர்வதேச அளவில் அமைப்புரீதியாக அந்த அமைப்பு பலமாகவே உள்ளது. அவர்கள் இப்போதும் செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். இலங்கையில் தொடர்ந்து பிரிவினைக் கோரிக்கையையும் தூண்டி வருகின்றனர்.
அவர்கள் பணபலத்துடன் உள்ளதால், இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச சமூகத்தை தூண்டி விடுகின்றனர். தவறான தகவல்களை அளித்து ஊடகங்களையும் எங்களுக்கு எதிராக திசை திருப்புகின்றனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications