பசுந்தேயிலைக்கு ரூ. 2 கூடுதலாக கொடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
சென்னை: நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளின் நலன் கருதி பசுந்தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு கூடுதலாக 2 ரூபாய் கொடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ரூ. 11 கோடியே 20 லட்சம் செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நீலகிரி மாவட்ட மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் இன்றியமையாத தொழிலாக தேயிலைத் தொழில் விளங்கி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 60 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் தங்கள் வாழ்க்கைக்கு இத்தொழிலையே நம்பியுள்ளனர்.
தேயிலை விவசாயிகளுக்கு கூடுதலான விற்பனை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரும் வகையில் என்னுடைய முந்தைய ஆட்சிக்காலத்தில் ஊட்டி டீ என்னும் பெயரில் தேயிலைத் தூள் விற்பனை செய்யும் திட்டத்தை நான் வகுத்து கொடுத்தேன்.
அதன்படி அரசு தேர்ந்தெடுத்த நிறுவனத்தின் மூலமாக ஏல விற்பனை மையங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட தேயிலையை வாங்கி பதப்படுத்தி அவற்றை சிப்பங்களில் அடைத்து ஊட்டி டீ என்ற வணிகப் பெயரில் கூட்டுறவுத் துறையால் நடத்தப்படுகின்ற பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதே போன்று சிறு தேயிலை விவசாயிகளின் தேயிலைக்கு நல்ல விலை கிடைப்பதற்கு ஏதுவாக கூஞுச் குஞுணூதிஞு என்று அழைக்கப்படும் கணினிமயமாக்கப்பட்ட மின் ஏல மையம் ஒன்றை 13.9.2003 அன்று நான் தொடங்கி வைத்தேன். உலகிலேயே தேயிலை விற்பனைக்கென ஏற்படுத்தப்பட்ட முதலாவது மின் ஏல மையம் என்ற பெருமையை இந்த மையம் பெற்றது.
2005-ம் ஆண்டு தேயிலை விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியில் இருந்து சிறு தேயிலை விவசாயிகளைக் காப்பாற்றுவதற்காக சிறு தேயிலை விவசாயிகள் பாதுகாப்புத் திட்டம் என்னும் ஒரு திட்டத்தையும் நான் செயல்படுத்தினேன்.
நீலகிரி மாவட்டத்தில் 15 தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 22 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கான கட்டுப்படியாகும் விலை கிலோ ஒன்றுக்கு சராசரியாக 6 ரூபாய் என வழங்கும் நிலை கடந்த மே மாதம் முதல் ஏற்பட்டுள்ளது.
தனியார் தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு 8 ரூபாய் வீதம் வழங்கி வரும் நிலையில் தேயிலைத் தொழிற்சாலை உறுப்பினர்களிடமிருந்து பெறப்படும் பசுந்தேயிலைக்கும் அதற்கு இணையான விலை வழங்கப்பட வேண்டும் என நான் உத்தரவிட்டிருந்தேன்.
இதன் அடிப்படையில் தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் உறுப்பினர்களாக உள்ள 22 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகளுக்கு பசுந்தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் கூடுதலக மே மாதத்திற்கு வழங்கப்பட்டது. இந்த 22 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகளுக்கு தேயிலைக்கான நியாயமான விலை தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பசுந்தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் கூடுதலாக வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். இதன் காரணமாக அரசுக்கு சுமார் 11 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.












Click it and Unblock the Notifications