இந்தியா அணு உலையில்லா நாடாக வேண்டும்: வைகோ அறிக்கை
சென்னை: இந்தியா அணு உலைகளே இல்லாத நாடாக வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜப்பானில், 1945 ஆகஸ்ட் 6 ஹிரோஷிமாவிலும், ஆகஸ்ட் 9 நாகசாகியிலும், அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்த கருப்பு நாள்; அணுக் கதிர்வீச்சின் எல்லையற்ற பாதிப்பைக் கருப்பு தினமாக உலகம் பதிய வைத்த நாள்.
28.06.1979-ல் அமெரிக்காவின் மூன்று மைல் தீவிலும், ரஷ்யாவில் 29.04.1986-ல் செர்னோபில்லிலும், 11.03.2011-ஆம் ஆண்டு ஜப்பானின் ஃபுகுஷிமாவிலும் அணு உலைகளில் வெடிப்பு நேர்ந்ததால் வெளியான கதிர்வீச்சின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் ஊனமாக, குணப்படுத்த முடியாத கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு நடைபிணங்களாகி உள்ளனர்.
இந்தப் படிப்பினைகள் காரணமாக, அமெரிக்கா கடந்த 35 ஆண்டுகளாக புதிய அணு உலைகள் எதையும் கட்டவில்லை. கூடங்குளம், கல்பாக்கம், ஏன் நாடு முழுவதும் தரமமற்ற அணுமின் நிலையங்களைக் கட்டித்தந்த ரஷ்யாவில்கூட, கடந்த 22 வருடங்களாக புதிய அணுஉலைகள் கட்டப்படவில்லை.
நடந்துவிட்ட எல்லா அபாயங்களையும் கண்ணால் பார்த்த பிறகும் இந்தியா மேலும் ஐந்து அணு உலைகளை அமைக்கப் போவதாக அறிவித்து இருப்பது, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக உள்ளது.
கல்பாக்கம் நிலநடுக்கப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிய நிலப்பரப்பில் ஏற்கனவே பல அணு உலைகள் அருகருகே அமைந்து இருக்கும் போது கூடுதலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஈணுலைகளை அமைப்பது நாட்டு மக்களுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
அணு உலை ஆபத்து இல்லாத நாடாக இருக்க வேண்டும் என்றால் பயன்பாட்டில் உள்ள கல்பாக்கம், கூடங்குளம் அணு உலைகளின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். உத்தேசிக்கப்பட்டு உள்ள அதிவேக ஈணுலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த அணு உலைக் கழிவுகளை கொண்டு வந்து, கல்பாக்கத்தில் சேமித்துப் பாதுகாக்கும் விஷக்கிடங்கு பரிசோதனை திட்டத்தைக் கைவிட வேண்டும்.
மேற்கு நாடுகளில் உள்ளது போல், அணு உலையைச் சுற்றி 16 கி.மீ. சுற்றளவில் வாழும் மக்களை இலவசக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். இப்பகுதியில் அனைத்து வசதிகளையும் கொண்ட முழுமையான அரசு பொது மருத்துவமனையை மத்திய அரசு உருவாக்கிட வேண்டும்.
கதிர்வீச்சைப் பொறுத்தவரை பாதுகாப்பான அளவு என ஒன்று இல்லை. எனவே கதிர்வீச்சின் அளவை, பாமர மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதற்கான டிஜிட்டல் கருவிகளைப் பொருத்தி மக்களின் ஐயத்தைத் தெளிவிக்க வேண்டும்.
அணு உலையில் விபத்து ஏற்பட்டால், அணுக் கதிர்வீச்சால் அனைவரும் அழிந்து போவோம். அணு உலை இல்லாத நாடே நமது நோக்கம். முதல்கட்டமாக இருக்கின்ற அணு உலைகளில் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications