லோக்பால் மசோதா நகலை எரித்து அன்னா ஹஸாரே போராட்டம்- அரசு கண்டனம்
டெல்லி: லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்ட லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் நகலை, சமூக சேவகர் அன்னா ஹஸாரே மற்றும் அவரது குழுவினர் இன்று தீவைத்து எரித்துப் போராட்டம் நடத்தினர். இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் இன்று மத்திய அரசின் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு அன்னா ஹஸாரே உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று அன்னா ஹஸாரே தலைமையில் மசோதா நகல்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் ஹஸாரே கூறுகையில், இந்த மசோதாவை நாங்கள் அப்படியே ஏற்க முடியாது. தற்போதைய மசோதாவால் ஊழலை திறம்பட ஒழிக்க முடியாது. முழுமையான பலனை இது தராது.
ஆகஸ்ட் 16ம் தேதி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தின்போது மசோதா நகல்களை எரித்து மிகப் பெரிய அளவில் எதிர்ப்பைக் காட்டுவோம். நாடு முழுவதும் மக்கள் இந்த மசோதா நகல் எரிப்பில் பங்கேற்குமாறு அழைக்கிறோம் என்றார்.
அன்னா குழுவைச் சேர்ந்த அரவிந்த கேஜிரிவால் கூறுகையில், மத்திய அரசு தன்னிச்சையாக, சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடையாளமாகவே இந்த மசோதா நகல் எரிப்பை நடத்தினோம் என்றார்.
காங்கிரஸ், மத்திய அரசு கண்டனம்
ஹஸாரே குழுவினரின் இந்தப் போராட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மசோதா நகல்களை எரிப்பது தவறான செயல். அவர்கள் இப்படிச் செய்வதற்குப் பதில் நாடாளுமன்றம் மீது நம்பிக்கை வைக்க முன்வர வேண்டும். அவர்களது இதயத்தில்தான் தீ இருக்க வேண்டுமே தவிர நாடாளுமன்றத்தின் மீத வைக்கக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications