காமன்வெல்த் போட்டி ஊழல்- பிரதமர் அலுவலகம், முதல்வர் ஷீலா தீட்சித் மீது சிஏஜி புகார்

கிட்டத்தட்ட 800 பக்கங்கள் கொண்ட சிஏஜியின் அறிக்கையில் காங்கிரஸ் கட்சிக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையிலான புகார்கள் நிறைய இடம் பெற்றுள்ளன.
காங்கிரஸ் கட்சி முதல்வர்களிலேயே சிறந்தவர் என்று கூறப்படுபவரான ஷீலா தீட்சித் மீது நிதியை முறைகேடாக செலவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. அதேபோல சுரேஷ் கல்மாடியை தலைவராக நியமித்ததில் பிரதமர் அலுவலகம் தவறிழைத்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருப்பதால் பிரதமருக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அறிக்கையில், பிரதமர் அலுவலக பரிந்துரையின்பேரில் 2004ம் ஆண்டு சுரேஷ் கல்மாடி, காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். விளையாட்டுத் துறை அமைச்சரின் கடும் ஆட்சேபனையையும் மீறி அவரது நியமனம் நடந்துள்ளது.
சுரேஷ் கல்மாடி தலைவராக நியமிக்கப்பட்டதற்கு பிரதமர் அலுவலகம்தான் பொறுப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், விளையாட்டுத்துறை அமைச்சகம், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆகியவற்றின் மீதும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
தாழ்தளப் பேருந்துகளை வாங்கியது, பஸ் நிறுத்த நிழற்கூரைகளை அமைத்தது, தெரு விளக்குகள் போட்டது, டெல்லி பஸ்களில் எல்இடி லைட் பேனல்களைப் பொருத்தியது ஆகியவற்றில் நிதி முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் சிஏஜி அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
தெரு விளக்குகள் போட்டது போன்றவை தொடர்பான ஒப்பந்தங்களை தவறானவர்களுக்கு அளித்ததன் மூலம் ரூ. 31 கோடி அளவுக்கு அரசுக்கு வீண்செலவு ஏற்பட முதல்வர் ஷீலா தீட்சித்தான் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டதும் பாஜகவினர் எழுந்து, ஷீலா தீட்சித் உடனடியாக விலக வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். பாஜக தலைவர் பல்பீல் புஞ்ச் பேசுகையில், இது மிகவும் தீவிரமான குற்றச்சாட்டு. பிரதமரும், மற்றவர்களும் விளக்கம் அளிக்க வேண்டும். பிரதமர்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் இந்தப் பிரதமர் சுதந்திரமான மனிதராக இல்லை என்று கூறினார்.இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications