திருச்சி: ஆ.ராசாவின் சகோதரரிடம் வருமான வரித்துறை விசாரணை

இவரிடம் கடந்த டிசம்பரில் ஏற்கனவே சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது வீட்டையும் சோதனையிட்டடது.
அதே போல கடந்த ஜூன் மாதம் இவரையும் ராசாவின் மனைவி பரமேஸ்வரியையும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர்.
இந் நிலையில் இன்றும் ராமச்சந்திரனிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
மதுரை-தளபதிக்கு ஜாமீன்:
கடந்த மாதம் 19ம் தேதி நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை திமுக மாவட்டச் செயலாளரும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மிக நெருக்கமானவருமான தளபதி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீன் கோரி தளபதி சார்பில் மதுரை ஜெஎம்1 நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் மாவட்ட நீதிமன்றதில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் தளபதி. இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி மாலா, தளபதியை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.
மேலும், தளபதியுடன் கைதான கொடி சந்திரசேகர், கிருஷ்ணா பாண்டியையும் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.
சிறையில் பொட்டு சுரேஷுக்கு முதல் வகுப்பு:
அதே போல அழகிரிக்கு மிக நெருக்கமான பொட்டு சுரேஷ், நில அபகரிப்பு வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் தனக்கு முதல் வகுப்பு சிறை வழங்க வேண்டும் என கோட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அவருக்கு முதல் வகுப்பு சிறை வழங்க உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் காவலில் எஸ்.ஆர். கோபி?:
இதே போல அழகிரிக்கு நெருக்கமான இன்னொருவரான எஸ்.ஆர்.கோபியும் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை வழக்கில், மதுரை ஜே.எம். -6 நீதிமன்றத்தில் நீதிபதி சுஜாதா முன்பு கடந்த 2ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை, ஏழு நாட்கள் போலீஸ் காவலில் விடக் கோரினர் அவனியாபுரம் போலீசார்.
இந்த வழக்கை விசாரணை மீண்டும் 4ம் தேதி நடைபெறும் என்றும், அன்று மீண்டும் எஸ்.ஆர்.கோபியை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி. அதன்படி கடந்த 4ம்தேதி இம்மனு விசாரணைக்கு வந்தது. எஸ்ஸார் கோபியை போலீசார் ஆஜர்படுத்தினர். போலீஸ் காவலில் விடும் முடிவை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட் டி.சுஜாதா உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று நீதிபதி டி.சுஜாதா முன்பு ஆஜர்படுத்தப்படுகிறார் கோபி. அவரை நீதிபதி போலீஸ் காவலில் எடுக்க அனுமதி அளிப்பாரா என்பது பிற்பகலில் தெரியும்.
பூண்டி கலைவாணனை சந்திக்க நாளை ஸ்டாலின் பாளை சிறைக்கு வருகை:
இதற்கிடையே சமச்சீர் கல்வி போராட்டத்தின் போது மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கிலும், திருத்துறைப்பூண்டியில் ஒரு கடையை அடித்து நொறுக்கிய வழக்கிலும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன்.
இவரை நேரில் சந்திக்க திமுக பொருளாளர் ஸ்டாலின் நாளை பாளையங்கோட்டை செல்கிறார்.












Click it and Unblock the Notifications