திருப்பதி அருகே சாலை விபத்தில் 4 கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் உள்பட 5 பேகர் பலி
திருப்பதி: திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்து வீடு திரும்பி 5 பேர் சாலை விபத்தில் சிக்கி பலியாகினர். இதில் 4 பேர் சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் ஆவர்.
சென்னை தரமணியில் உள்ள டைடல் பார்க்கில் மயிலாப்பூரை சேர்ந்த வசீம்ராஜா (25), நீலங்கரையை சேர்ந்த கார்த்தி (24), வடபழனியைச் சேர்ந்த ஜெயமூர்த்தி (28), சூளையைச் சேர்ந்த சதீஷ் (26), அசோக், கார்த்தி, தப்பான் ஆகியோர் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் என்ஜீனியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் 7 பேரும் திருப்பதி கோயிலுக்கு பஸ்சில் சென்றனர். திருப்பதியில், சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, அங்கிருந்து, காளஹஸ்தி கோயிலுக்கு செல்ல வாடகை ஜீப் ஒன்றில், 7 பேரும் பயணித்தனர்.
ஜீப்பை திருப்பதியை சேர்ந்த சதீஷ் (25) ஓட்டினார். சீதாராம்பேட்டை அருகே ஜீப் வந்த போது, எதிரே நெல்லூரி்ல் இருந்து தக்காளி ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் ஜீப்பில் வந்த ஜெயமூர்த்தி, சதீஷ், வசீம்ராஜா, கார்த்தி, டிரைவர் சதீஷ் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த மற்றவர்கள், திருப்பதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்தால், திருப்பதி-காளஹஸ்தி சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications