சிஏஜி அறிக்கை எதிரொலி: ஷீலா தீட்சித் விலகக் கோரி நாடாளுமன்றத்தில் கடும் அமளி- ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் இன்று முற்பகல் கூடியபோது இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பான சிஏஜி அறிக்கையை வைத்து பிரச்சினை எழுப்பின.
லோக்சபாவில் காலை அவை கூடியதும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் மீரா குமார் இருக்கை முன்பு திரண்டனர். சிஏஜி அறிக்கை தொடர்பாக விவாதிக்க அவையின் கேள்விநேரத்தை ஒத்திவைக்க வேண்டும். டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விவாகரம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மேக்கான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று கோரி கோஷமிட ஆரம்பித்தனர்.
இதனால் அவையில் பெரும் அமளியாக இருந்தது. உறுப்பினர்களை அமருமாறு சபாநாயகர் பலமுறை வலியுறுத்தியும் அவர்கள் உட்கார மறுத்தனர். இதையடுத்து அவையை ஒத்தி வைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதேபோல ராஜ்யசபாவிலும் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியில் குதித்ததால் ராஜ்யசபாவும் ஒத்திவைக்கப்பட்டது.
இரு அவைகளும் பிற்பகல் 12 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications