சென்னை- மன்னார்குடி அரசு சொகுசுப் பேருந்தில் பயணிகள் பட்ட பாடு- 'மூட்டைப் பூச்சி'யுடன் அவதிப் பயணம்!
மன்னார்குடி: அல்ட்ரா டீலக்ஸ் என்று வெளியில் பெயரும், உள்ளே போனால் ஆர்டினரி சீட்களும், கூடுதலாக குவியல் குவியலாக மூட்டைப் பூச்சிகளும் படையெடுக்க பெருத்த கஷ்டத்துடன் சென்னையிலிருந்து மன்னார்குடிக்குப் பயணம் செய்து பெரும் மன உளைச்சலை சந்தித்துள்ளனர் பயணிகள். இதனால் கடும் ஆத்திரமடைந்த அவர்கள் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகமாக முன்பு இயங்கியபோது தமிழக மக்களின் மனம் கவர்ந்த பேருந்துகளாக அரசு விரைவுப் பேருந்துகள் இயங்கி வந்தன. ஆனால் பின்னர் இவை அரசு விரைவுப் பேருந்துக் கழகமாக மாறிய பின்னர் மகா மோசமான பஸ்களாக இப்போது மாறி விட்டன.
அல்ட்ரா டீலக்ஸ், அந்த டீலக்ஸ் இந்த டீலக்ஸ் என்று பெயர்களை மட்டும் வைத்துக் கொண்டு படு மோசமான நிலையில் உள்ளன இந்த விரைவுப் பேருந்துகள். சீட்கள் அழுக்கடைந்து, சீட்களை பின்னுக்குத் தள்ளும் லீவர்கள் பழுதடைந்து, சீட் துணிகள் கிழிந்து, முடை நாற்றம் வீசும் பஸ்களின் உட்புறம், மூட்டைப் பூச்சித் தொல்லை என மிகவும் மோசமான நிலையில் உள்ளன இந்த பேருந்துகளில் பெரும்பாலானாவை.
அம்சமாக வந்து நிற்கும் ஆம்னி பஸ்களுக்கு பக்கத்தில் இந்தப் பேருந்துகளை நிற்க வைத்தால் படு பரிதாபமாக தோன்றும் அரசுப் பேருந்துகள். இருந்தாலும் அரசுப் பேருந்துகளை நம்பி இருக்கும் பயணிகள் ஏராளம். கட்டணம் குறைவு என்பதோடு, வழியில் ஏதாவது பிரச்சினை என்றால் வேறு பஸ்சில் ஏற்றி அனுப்பி விடுவார்கள் உள்ளிட்ட சவுகரியங்களால் அரசுப் பேருந்துகளை நாடி வருவோர் நிறையவே உள்ளனர்.
ஆனால் இப்படிப்பட்ட ஒரு பஸ்சில் பயணித்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளான சோகம் நடந்துள்ளது மன்னார்குடியில்.
சனிக்கிழமை இரவு சென்னையிலிருந்து ஒரு அல்ட்ரா டீலக்ஸ் விரைவுப் பேருந்து மன்னார்குடிக்குப் புறப்பட்டது. அதில் பயணிகள் முன்பதிவு செய்து டிக்கெட் வாங்கி பயணித்தனர். ஆனால் பஸ்சுக்குள் சென்ற அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அல்ட்ரா டீலக்ஸ் என்று கூறிக் கொண்டு படு மோசமான சீட்களுடன் பஸ் காட்சி அளித்தது. இதுகுறித்து டிரைவர், கண்டக்டரிடம் கேட்டபோது என்ன செய்வதுங்க, இந்த பஸ்சைத்தான் கொடுத்துள்ளனர் என்று கூறியுள்ளனர். பின்னர் இருக்கையில் அமர்ந்தபோது மூட்டைப் பூச்சிகள் படையெடுத்து கடிக்க ஆரம்பித்தன.
இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். உட்காரவே முடியாத அளவுக்கு மூட்டைப் பூச்சிகள் சரமாரியாக கடிக்கவே யாருமே தூங்க முடியவில்லை, நிம்மதியாக பயணிக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் டிரைவர்களிடம் புகார் செய்தபோது கடந்த சில மாதங்களாக பஸ்கள் பராமரிக்கப்படுவதில்லை என்று கூறினர்.
சரி இதை முதலிலேயே சொல்லியிருந்தால் நாங்கள் வேறு பஸ்சில் போயிருப்போமே என்று கேட்டபோது பஸ்சை ஓட்டிச் செல்வது மட்டுமே எங்களது வேலை என்று பதில் வந்துள்ளது.
அதுவரை சற்று பொறுமையுடன் இருந்த பயணிகள் இந்தப் பதிலைக் கேட்டதும் கடுப்பாகி விட்டனர். மன்னார்குடி வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்த அவர்கள், மிகவும் சிரமத்துடன் ஊர் வந்து சேர்ந்தனர்.
ஊருக்கு வந்ததும் பஸ்சை விட்டு இறங்கி அதை நகர விடாமல் சிறை பிடித்தனர். பஸ்சுக்கு முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். அதைப் பார்த்த டிரைவரும், கண்டக்டரும் அங்கிருந்து போய் விட்டனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த அக்கிரமம் குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தை நாடப் போவதாக பயணிகள் கூறினர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தப் பேருந்துதான் என்றில்லை, பெரும்பாலான அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இப்படித்தான் மகா மோசமான நிலையில் உள்ளன.
நமது பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் அட்டகாசமான விரைவுப் பேருந்துகளை அரசு இயக்குகிறது. அந்தப் பேருந்துகளில் பயணிக்க கர்நாடக பயணிகளை விட தமிழகப் பயணிகள்தான் அதிகம் விரும்புகிறார்கள். காரணம் பஸ்களில் காணப்படும் வசதிகளும், சிறப்பம்சங்களும். ஆனால் தமிழக அரசுப் பேருந்துகள் மட்டும் ஏன் இப்படி பிச்சைக்காரத்தனமாக இருக்கிறது என்பதுதான் புரியவில்லை.












Click it and Unblock the Notifications